search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பணி நீக்கம் செய்யப்பட்ட 4,300 பேருக்கு எல்.ஐ.சி.யில் மீண்டும் வேலை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
    X

    பணி நீக்கம் செய்யப்பட்ட 4,300 பேருக்கு எல்.ஐ.சி.யில் மீண்டும் வேலை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

    பணி நீக்கம் செய்யப்பட்ட 4,300 பேருக்கு எல்.ஐ.சி.யில் மீண்டும் வேலை வழங்குமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
    புதுடெல்லி:

    பணி நீக்கம் செய்யப்பட்ட 4,300 பேருக்கு எல்.ஐ.சி.யில் மீண்டும் வேலை வழங்குமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    எல்.ஐ.சி. என்னும் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம், 1985-ம் ஆண்டு முதல் தற்காலிகமாக பணியில் அமர்த்தப்பட்டவர்களை, பணி நிரந்தரம் செய்ய மறுத்து பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து எல்.ஐ.சி. தற்காலிக பணியாளர் சங்கம் சார்பில் அதன் தலைவர் கே.கருணாகரன், 1989-ம் ஆண்டில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். அதை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, தற்காலிக பணியாளர்களை மீண்டும் தற்காலிக பணியில் அமர்த்த எல்.ஐ.சி.க்கு உத்தரவிட்டது.

    இந்த வழக்கை மேலும் விசாரிக்க டெல்லியில் உள்ள மத்திய தொழிலாளர் தீர்ப்பாயத்தை அணுகலாம் என்றும் பரிந்துரை செய்தது. அங்கு ஊழியர்களுக்கு சாதகமாக 2001-ல் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

    இதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் எல்.ஐ.சி. நிர்வாகம் மேல்முறையீடு செய்தது. அங்கு தனி நீதிபதி எல்.ஐ.சி.யின் கோரிக்கையை ஏற்று தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ரத்து செய்தார். தற்காலிக பணியாளர்கள் சங்கம், டெல்லி ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்சில் மேல்முறையீடு செய்தது. அது அங்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.

    இதையடுத்து தற்காலிக பணியாளர்கள் சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதை நீதிபதிகள் வி.கோபால கவுடா மற்றும் சி.நாகப்பன் ஆகியோர் விசாரித்து, மத்திய தொழிலாளர் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து தீர்ப்பு அளித்தனர். பணிநீக்கம் செய்யப்பட்ட அனைத்து ஊழியர்களும் உடனடியாக பணியில் சேர்த்துக்கொள்ளப்படவும், 2001-ம் ஆண்டில் இருந்து அனைத்து பயன்களும் வழங்கப்படவும் அதில் உத்தரவிடப்பட்டது.

    அந்த தீர்ப்பை ஏற்று சுப்ரீம் கோர்ட்டு நிறைவேற்றாததால், எல்.ஐ.சி. தற்காலிக பணியாளர்கள் சங்கம் சார்பில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. எல்.ஐ.சி., சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரியது.
    அவற்றின் மீதான விசாரணை நீதிபதிகள் வி.கோபால கவுடா, சி.நாகப்பன் ஆகியோர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வந்தது. எல்.ஐ.சி. தற்காலிக பணியாளர்கள் சங்கம் சார்பில் மூத்த வக்கீல் எம்.என். கிருஷ்ணமணி, எம்.ஏ.சின்னசாமி, நந்தகுமார் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

    இந்த வழக்கில் நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

    எல்.ஐ.சி. நிறுவனத்தில் தற்காலிக பணியில் அமர்த்தப்பட்ட ஊழியர்கள், நிரந்தர ஊழியர்களுக்கு அளிக்கப்படும் ஊதியங்கள் மற்றும் சலுகைகளை பெற உரிமை உண்டு. அவர்கள் கடந்தகால ஊதிய தொகைக்கும் உரிமை பெற்றவர்கள் ஆகிறார்கள். ஆனால் எல்.ஐ.சி. நிறுவனத்துக்கு இதனால் ஏற்படும் நிதி சுமையை கருத்தில் கொண்டு ஊழியர்களுக்கான கடந்த கால ஊதியத்தொகையில் 50 சதவீதத்தையும், மற்ற சலுகைகளையும் சேர்த்து வழங்க வேண்டும்.

    ஒரு ஊழியர் அவருடைய பணிக்காலத்தை கணக்கிட்டு நிரந்தர பணியாளர்களாக அறிவிக்க வேண்டும். இந்த வழக்கு 25 ஆண்டுகளுக்கு மேல் நடந்து வந்ததால் தீர்ப்பு கிடைத்த 8 வாரங்களுக்குள் 2015-ம் ஆண்டு மார்ச் 18-ந் தேதி வெளியிட்ட தீர்ப்பின் அடிப்படையில் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்குள் பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை எனில் பணியாளர்கள் எல்.ஐ.சி. நிறுவனத்துக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனுக் களை தாக்கல் செய்யலாம்.

    இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

    இந்த தீர்ப்பை தமிழ்நாடு பணிநீக்கம் செய்யப்பட்ட முழுநேர எல்.ஐ.சி. தற்காலிக பணியாளர்கள் சங்க மாநில தலைவர் பி.வாசு வரவேற்றார். இந்த தீர்ப்பினால், தமிழகத்தில் சுமார் 1,300 மற்றும் இந்தியா முழுவதும் சுமார் 4,300 ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என தெரிவித்தார்.
    Next Story
    ×