search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    32 தமிழர்கள் கைதான விவகாரம்: ரேணிகுண்டா டி.எஸ்.பி. பேட்டி
    X

    32 தமிழர்கள் கைதான விவகாரம்: ரேணிகுண்டா டி.எஸ்.பி. பேட்டி

    ஆந்திராவில் 32 தமிழர்கள் நேற்று கைது செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பு ஏற்படுத்தியதை தொடர்ந்து ரேணிகுண்டா டி.எஸ்.பி. செய்தியாளர்களிடம் விளக்கமளித்துள்ளார்.
    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா ரெயில் நிலையத்த்தில், நேற்று இரவு ஆந்திர போலீசார் 32 தமிழர்களை, அதிரடியாக ரெயிலை விட்டு கீழே இறக்கினர். அவர்களிடம் எந்தவித விசாரணையும் நடத்தாமல் சந்தேகத்தின் பேரில் கைது செய்து 32 பேரையும் விசாரணைக்காக ரேணிகுண்டா போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில், கைது செய்யப்பட்ட 32 தமிழர்களையும் இன்று பத்திரிகையாளர் சந்திப்பின்போது ஆந்திர போலீசார் ஆஜர் படுத்தினர்.

    பின்பு, செய்தியாளர்களிடம் ரேணிகுண்டா டி.எஸ்.பி. நஞ்சுண்டப்பா கூறியதாவது:-

    நேற்று ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்ட தமிழர்கள் 32 பேர் திருவண்ணாமலை, வேலூர், சென்னை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதில் 29 பேர் திருவண்ணாமலை மாவட்டத்தையும், 2 பேர் வேலூர் மாவட்டத்தையும், ஒருவர் சென்னை மாவட்டத்தையும் சேர்ந்தவர்.

    திருப்பதிக்கு செம்மரங்களை வெட்ட செல்வதாக கூறி சென்னையிலிருந்து ரெயிலில் வந்த 32 பேரையும் ரேணிகுண்டாவில் நேற்று ஆந்திர போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து கோடாரி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நேற்று 32 தமிழர்கள் கைது செய்தது தொடர்பாக தமிழக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருப்பதி சேஷாசல வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்த முயன்றதாக தமிழக தொழிலாளர்கள் 20 பேர் ஆந்திர போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×