search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உலோக சிலைகள் - பாவை விளக்குகள் திருடிய இருவர் கைது
    X

    உலோக சிலைகள் - பாவை விளக்குகள் திருடிய இருவர் கைது

    • சந்தேகம் அடைந்த போலீசார் 2 பேரையும் விரட்டிச் சென்று பிடித்து விசாரணை நடத்தினர்.
    • உலோக நாகலிங்கம் சிலை, திருவாச்சியுடன் கூடிய உலோக அம்மன் சிலை, 2 உலோக பாவை விளக்குகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கும்பகோணம்:

    சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி. ஜெயந்த்முரளி, ஐ.ஜி. தினகரன், போலீஸ் சூப்பிரண்டு ரவி ஆகியோரின் உத்தரவின்படி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மலைச்சாமி, துணை போலீஸ் சூப்பிரண்டு கதிரவன் ஆகியோரின் அறிவுறுத்தல்படி, சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பைபாஸ் சாலை ராம்நகர் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 2 பேர் போலீசாரை கண்டதும் ஓடினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் 2 பேரையும் விரட்டிச் சென்று பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில் அவர்கள் கும்பகோணம் அருகே உள்ள தேனாம்படுகை வடக்கு தெருவை சேர்ந்த குருசேவ் (வயது42), கொரநாட்டுக்கருப்பூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பவுன்ராஜ் (36) ஆகியோர் என்பதும், உலோக சிலைகள், பாவை விளக்குகளை திருடி மறைத்து வைத்திருப்பதும் தெரியவந்தது.

    பின்னர் அங்கு உள்ள ஒரு இடத்தில் வெள்ளை துணியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உலோக நாகலிங்கம் சிலை, திருவாச்சியுடன் கூடிய உலோக அம்மன் சிலை, 2 உலோக பாவை விளக்குகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    2 பேர் கைது இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குருசேவ், பால்ராஜ் ஆகிய 2 பேரையும் கும்பகோணம் கோர்ட்டில் நீதிபதி சண்முகப்பிரியா முன்பாக ஆஜர் படுத்தினர். அப்போது 2 பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட உலோக சிலைகள் மற்றும் பாவை விளக்குகள் கும்பகோணம் உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்தில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    Next Story
    ×