search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முக்கொம்பு மேலணைக்கு நீர்வரத்து 1 லட்சத்து 53 ஆயிரம் கனஅடியாக உயர்வு
    X

    முக்கொம்பு மேலணைக்கு நீர்வரத்து 1 லட்சத்து 53 ஆயிரம் கனஅடியாக உயர்வு

    • முக்கொம்பு மேலணைக்கு நீர்வரத்து 1 லட்சத்து 53 ஆயிரம் கனஅடியாக உயர்வுந்துள்ளது
    • வீடுகளுக்கு திரும்ப முடியாமல் முகாம் வாசிகள் தவிப்பு

    திருச்சி:

    வீடுகளுக்கு திரும்ப முடியாமல் முகாம் வாசிகள் தவிப்பு

    கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பி வழிகின்றன. இதில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு மேட்டூர் அணையை வந்தடைகிறது. கடந்த 5 நாட்களாக அபரிமிதமான நீர்வரத்து காணப்பட்டது.

    இதனால் மேட்டூர் அணையில் இருந்து அதிகபட்சமாக 2 லட்சத்து 17 ஆயிரம் கன அடி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு சற்று நீர் வரத்து குறைந்திருந்த நிலையில் நேற்று மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ள காரணத்தினால் 6-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    திருச்சி மாவட்டத்தில் நேற்றைய தினம் நீர்வரத்து சற்று சரிந்து வீடுகள் மற்றும் விளை நிலங்களில் புகுந்த வெள்ள நீர் வடிந்தது. இந்த நிலையில் இன்று மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

    இதனால் வீடுகளில் இருந்து வெளியேறி முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருந்த உத்தமர்சீலி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வீடு திரும்ப முடியாமல் முகாம்களில் முடங்கி இருக்கிறார்கள். மாவட்டம் முழுவதும் ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெல் மற்றும் வாழை மரங்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    நேற்றைய தினம் காலையில் முக்கொம்பு மேலணையில் இருந்து 36 ஆயிரம் கனஅடி நீர் காவிரியிலும், 94 ஆயிரம் கன அடி நீர் கொள்ளிடத்திலும் திறந்து விடப்பட்டது. இன்றைய தினம் முக்கொம்பு மேலணைக்கு காலை 8 மணி நிலவரப்படி 1 லட்சத்து 53 ஆயிரம் கனஅடி நீர் வந்தது.

    இதையடுத்து காவிரியில் 45 ஆயிரம் கனஅடி நீரும், கொள்ளிடம் ஆற்றில் 1 லட்சத்து 8 ஆயிரம் கனஅடி நீரும் திறந்து விடப்பட்டது. இதற்கிடையே மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை ஒரு லட்சத்து 45 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டது.

    அது மட்டுமல்லாமல் பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட 25 ஆயிரம் கனஅடி நீர் மற்றும் அமராவதி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட 10,000 கனஅடி நீர் கரூர் மாவட்டம் திருமுக்கூடலூலில் காவிரியில் ஐக்கியமாகி மாயனூருக்கு வருவதால் முக்கொம்பு அணைக்கு நீர்வரத்து மதியத்துக்கு மேல் மேலும் உயரும் என பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ராஜா தெரிவித்தார்.

    Next Story
    ×