search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலையில் இருந்து வெளிமாநிலங்களுக்கு  தக்காளி விற்பனை அதிகரிப்பு
    X

    கோப்புபடம். 

    உடுமலையில் இருந்து வெளிமாநிலங்களுக்கு தக்காளி விற்பனை அதிகரிப்பு

    • கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் சாகுபடி பரப்பு குறைந்துள்ளது.
    • தற்போது வரத்து சீசன் ஆரம்பித்துள்ளது.

    மடத்துக்குளம்:

    உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரத்தில், 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்தாண்டு பருவமழை அதிகரிப்பு மற்றும் தக்காளிக்கு கூடுதல் விலை கிடைத்ததால் இரு மாதமாக உடுமலை பகுதிகளில் வழக்கத்தை விட கூடுதல் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    தக்காளி விளையும் மற்ற மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் சாகுபடி பரப்பு குறைந்துள்ளது.உடுமலை பகுதிகளில் மட்டும் கடந்த மாதம் சாகுபடி செய்யப்பட்ட தக்காளி அறுவடை துவங்கியுள்ளது. இப்பகுதியில் விளையும் தக்காளியை விவசாயிகள் உடுமலை சந்தை மற்றும் சுற்றுப்பகுதியில் அமைந்துள்ள கமிஷன் கடைகளில், ஏல முறையில் வியாபாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர்.

    உடுமலை சந்தைக்கு சராசரியாக 14 கிலோ கொண்ட பெட்டி 3 முதல், 5 ஆயிரம் வரை மட்டுமே வரத்து இருக்கும். தற்போது சீசன் துவங்கியுள்ளதால் தினமும், 15 ஆயிரம் முதல்25 ஆயிரம் தக்காளி பெட்டிகள் வரை வரத்து காணப்படுகிறது.

    உடுமலை சந்தையில்கடந்த வாரம் 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி 450 ரூபாய் வரை விற்றது. வரத்து அதிகரிப்பு காரணமாக தற்போது விலை குறைந்து ஒரு பெட்டி ரூ.250 முதல் ரூ.350 வரை விற்று வருகிறது.உள்ளூர் வியாபாரிகள் மட்டுமன்றி கேரளா மாநிலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்துள்ள வியாபாரிகள் தக்காளி கொள்முதல் செய்து, லாரிகளில் ஏற்றிச்செல்கின்றனர். தக்காளி சீசன் துவங்கியுள்ளதால், சந்தை வளாகம் களைகட்டியுள்ளது.

    இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

    உடுமலை சுற்றுப்பகுதிகளில் ஆண்டு முழுவதும் தக்காளி நடவு செய்யப்படுகிறது. தக்காளி சாகுபடி செய்யப்படும் மற்ற பகுதிகளில், இந்த பருவத்தில் சாகுபடி செய்யப்படுவதில்லை.உடுமலை பகுதியில் மட்டும் தக்காளி சாகுபடி பரப்பு அதிகரிக்கும். இதனால், ஜூலை முதல் டிசம்பர் வரை தக்காளி வரத்து அதிகரித்து இருக்கும். பல்வேறு மாவட்ட விவசாயிகளும் வந்து வாங்குவதோடு கர்நாடகா, கேரளா மாநிலத்திற்கும் அதிகளவு விற்பனைக்கு செல்லும். இதனால் வரத்து பல மடங்கு உயர்ந்தாலும் பெரிய அளவில் விலை சரிவு இருக்காது.தற்போது சிறிய ரக தக்காளி பெட்டி 220 முதல் 350 ரூபாய் வரையும், தரமான தக்காளி ரகம், 300 முதல் 350 ரூபாய் வரை விலை கிடைத்து வருகிறது.

    தற்போது வரத்து சீசன் ஆரம்பித்துள்ளது.படிப்படியாக அதிகரித்து சராசரியாக 70 ஆயிரம் பெட்டிகள் வரை உயரும் வாய்ப்புள்ளது.10 ஆண்டுக்கு முன் இரண்டு லட்சம் பெட்டி வரை வரத்து இருந்தது. சாகுபடி பரப்பு குறைவு, பல்வேறு இடங்களில் கொள்முதல் மையங்கள் அமைத்ததால் உடுமலை சந்தைக்கு வரத்து குறைந்துள்ளது.கடந்தாண்டு பருவ மழை பெய்ததோடு 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி 900 ரூபாய் வரை விற்றதால் நடப்பு சீசனில் அதிகளவு விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்துள்ளனர்.இதனால் நடப்பு பருவத்தில் தக்காளி வரத்து பெருமளவு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

    உடுமலை சுற்றுப்பகுதிகளில் மட்டும் விளைச்சல், தேவை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களினால் பெரிய அளவில் விலை குறைய வாய்ப்பில்லை. இவ்வாறு வியாபாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×