search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காதல் திருமணம் செய்த மகளிடம் தங்களுடன் வருமாறு கெஞ்சிய பெற்றோர்
    X

    காதல் திருமணம் செய்த மகளிடம் தங்களுடன் வருமாறு கெஞ்சிய பெற்றோர்

    • வரமறுத்ததால் போலீஸ் நிலையம் முன்பு தீக்குளிக்க முயற்சி
    • போலீசார் தண்ணீர் ஊற்றி அவர்களை மீட்டனர்

    திருப்பத்துார்:

    திருப்பத்துார் அருகே கொடும்மாம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (49). இவர்களது 19 வயது மகள் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    இந்நிலையில், இவர் திருப்பத்துார் அருகே உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் போது, அதே பள்ளியில் படித்த மாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த சூர்யா என்பவரை காதலித்து வந்தார்.

    இவர்களின் காதலுக்கு பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.இதனால் இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்ய முடிவெடுத்தனர். அதன்படி இருவரும் 2 நாட்களுக்கு முன் வீட்டை விட்டு சென்று கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். அதன்பின் நேற்று இருவரும் பாதுகாப்பு கேட்டு திருப்பத்துார் தாலுகா போலீசில் தஞ்சமடைந்தனர்.

    இதனைதொடர்ந்து போலீசார் இரு தரப்பு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அங்கு வந்த பெண்ணின் பெற்றோர் தனது மகளை எப்படியாவது தங்களிடம் சேர்த்து வைக்குமாறு போலீசாரிடம் கதறி அழுதனர். அவரது மகளிடம் தங்களுடன் வருமாறு கெஞ்சினர்.

    ஆனால் இருவரும் மேஜர் என்பதால், அந்த பெண் தன் காதல் கணவனுடன் செல்வேன் என திட்டவட்டமாக கூறினார்.

    இதனால் போலீசார் அந்த பெண்ணிடம் எழுதி வாங்கிக்கொண்டு அவரது காதல் கணவனுடன் அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவத்தால் அதிர்ச்சிடைந்த பெண்ணின் பெற்றோர் போலீஸ் நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். அத்துடன் தாங்கள் மறைத்து வைத்திருந்த கேனில் இருந்த மண்ணெண்ணெய் தங்களது மீது ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

    விரைந்து வந்த போலீசார் அவர்களிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்து அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி அவர்களை மீட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×