search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சொக்க வைக்கும் செக்கச்செவேல் ஆந்திரா-கர்நாடக தக்காளி குவிகிறது: உள்ளூர் தக்காளிக்கு மவுசு குறைந்தது
    X

    சொக்க வைக்கும் செக்கச்செவேல் ஆந்திரா-கர்நாடக தக்காளி குவிகிறது: உள்ளூர் தக்காளிக்கு மவுசு குறைந்தது

    • பொதுவாக நாட்டு தக்காளி பச்சை, வெள்ளை நிறத்தில் இருந்து பழுக்கும் போது சிவப்பாக மாறும்.
    • ஆனாலும் முற்றிலும் சிவப்பாக மாறாது. சாப்பிடும் போது புளிப்பும் கலந்து இருக்கும். இதுதான் ஒரிஜினல் நாட்டுத்தக்காளி.

    தக்காளி...

    வாங்குவாரில்லாமல் பல நேரங்களில் வீதியில் கொட்டப்படுவதும் உண்டு. கிலோ ரூ.100-ஐ கடந்து ரசம் வைக்க ஒரு தக்காளி கிடைக்காதா என்று ஏங்க வைப்பதும் உண்டு.

    சமீபத்தில் கிலோ ரூ.70-ஐ கடந்த நிலையில் இப்போது வீதிவீதியாக 6 கிலோ ரூ.100-க்கு விற்கும் அளவுக்கு விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக இந்த நாட்டுத்தக்காளி ஆப்பிள் தக்காளியை போல் உருண்டை வடிவத்தில் உள்ளது. முக்கியமாக ரத்த சிவப்பு நிறத்தில் பார்த்ததும் வாங்கும் அளவுக்கு சுண்டி இழுக்கிறது.

    பொதுவாக நாட்டு தக்காளி பச்சை, வெள்ளை நிறத்தில் இருந்து பழுக்கும் போது சிவப்பாக மாறும். ஆனாலும் முற்றிலும் சிவப்பாக மாறாது. சாப்பிடும் போது புளிப்பும் கலந்து இருக்கும். இதுதான் ஒரிஜினல் நாட்டுத்தக்காளி.

    ஆனால் இப்போது விற்பனையாகும் நாட்டுத்தக்காளி பார்ப்பதற்கு சிவப்பு மட்டுமல்ல சாப்பிடுவதற்கும் இனிப்பாக இருக்கிறது. நம்ம ஊர் நாட்டு தக்காளியை ரசத்தில் வேகவைத்தால் நன்றாக வெந்து தண்ணீரில் கரையும். ஆனால் இந்த தக்காளியை எவ்வளவு நேரம் வேக வைத்தாலும் வேகுவதில்லை. குழம்பில் துண்டு துண்டாகவே கிடக்கிறது.

    பொதுவாக தக்காளி விதைகளை முளைக்க போட்டால் முளைக்கும். ஆனால் இந்த தக்காளி விதைகள் முளைப்பதில்லை என்றும் கூறப்படுகிறது. ஒருவேளை இதுவும் ரசாயன கலவை தெளித்து பழுக்க வைக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் பலரிடம் ஏற்பட்டுள்ளது.

    இதுபற்றி கோயம்பேடு தக்காளி மொத்த வியாபாரி ரவிச்சந்திரனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    இதுவும் நாட்டு தக்காளிதான். ஆனால் நம் ஊரில் விளைவதில்லை. ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் மட்டும் விளைகிறது. அங்கு தக்காளி நாற்றை வாங்கித்தான் பயிரிடுகிறார்கள். நம்மூர் மண்ணில் அவை வளர்வதில்லை.

    இந்த தக்காளியின் பெயர் 'சாஹோ 3140' என்பதாகும். புளிப்பு இருக்காது. வேக அடம் பிடிக்கிறது என்பதெல்லாம் உண்மை தான். ஆனால் ரத்த சிவப்பு நிறத்தை பார்த்து வாடிக்கையாளர்கள் மயங்கிவிடுகிறார்கள். நம்மூர் தக்காளியை வாங்குவதில்லை. நம்மூர் நாட்டு தக்காளிகள் உடுமலைபேட்டை, பொள்ளாச்சி, வத்தலகுண்டு, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, ஒட்டன்சத்திரம், தேனி, கம்பம் ஆகிய இடங்களில் அதிகமாக விளைகிறது.

    சந்தைக்கு வரும்போது ஆந்திரா நாட்டுத் தக்காளியா? உள்ளூர் தக்காளியா? என்று வரும்போது தோல் சிவந்த அடுத்த மாநில தக்காளிக்குத்தான் மரியாதை கிடைக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×