search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வன்முறை: வெங்கடேசன் எம்.பி. உள்பட 458 பேர் மீது வழக்குப்பதிவு
    X

    மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வன்முறை: வெங்கடேசன் எம்.பி. உள்பட 458 பேர் மீது வழக்குப்பதிவு

    • அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தி பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தது, போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்பட 4 பிரிவுகளின் கீழ் திலகர் திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    • ரெயில் நிலையத்துக்குள் அத்துமீறி புகுந்து பெண் போலீசாரை தாக்கி காயப்படுத்தியது உள்பட 5 பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    மதுரை:

    மத்திய அரசின் 'அக்னிபாத்' திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று மதுரை ரெயில் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தின்போது போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஆயுதப்படை போலீஸ்காரர் மணிராஜாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    கம்யூனிஸ்ட் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மதுரை ரெயில் நிலையத்துக்குள் அத்துமீறி புகுந்தனர். அவர்களை பெண் போலீசார் உள்பட பலர் தடுத்து நிறுத்த முயன்றனர். அவர்களுக்கும் அடி உதை விழுந்தது.

    இதுகுறித்து மதுரை நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சேதுமணி மாதவன், சப்-இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன், சரவணன் மற்றும் ஆயுதப்படை போலீஸ்காரர் மணிராஜா ஆகியோர் திலகர் திடல் போலீசில் புகார் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சி தொகுப்புகள் மற்றும் கண்காணிப்பு கேமிராவில் இடம்பெற்றிருந்த காட்சிப் பதிவு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. இதில் மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் போலீசாரை சரமாரியாக தாக்கியது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தி பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தது, போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்பட 4 பிரிவுகளின் கீழ் திலகர் திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ரெயில் நிலையத்துக்குள் அத்துமீறி புகுந்து பெண் போலீசாரை தாக்கி காயப்படுத்தியது உள்பட 5 பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    மேலும் போலீசாரை சரமாரியாக தாக்கி காயப்படுத்தியது உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. மதுரை ரெயில் நிலைய வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி வன்முறையில் ஈடுபட்டதாக மதுரை வெங்கடேசன் எம்.பி., நிர்வாகிகள் விஜயராகவன், கணேசன், ராஜேந்திரன், ரமேஷ், நரசிம்மன், சசிகலா, பார்த்தசாரதி, அரவிந்தன் உள்பட 458 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் 60 பேர் பெண்கள் ஆவர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் போலீஸ்காரரை மார்க்ச்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகி தாக்குவது வீடியோ காட்சிகளின் வாயிலாக தெரியவந்தது. இதுதொடர்பாக திலகர் திடல் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரை தாக்கியது களத்து பொட்டல் பகுதியைச் சேர்ந்த பிச்சை (58) என்பதும், இவர் அந்த பகுதியில் வார்டு உறுப்பினராக உள்ளார் என்பதும் தெரிய வந்தது.

    Next Story
    ×