search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அடுத்து என்ன செய்வது? - ஓ.பி.எஸ். தீவிர ஆலோசனை
    X

    அடுத்து என்ன செய்வது? - ஓ.பி.எஸ். தீவிர ஆலோசனை

    • டெல்லி சட்ட நிபுணர்களிடமும் கருத்துகள் பெற ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் முடிவு செய்துள்ளனர்.
    • நிபுணர்கள் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில் மேல்முறையீட்டு மனுவை தயாரிக்க உள்ளனர்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் அதிகாரத்தை கைப்பற்ற எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே நடக்கும் பலப்பரீட்சை அடுத்த கட்டமாக டெல்லி சுப்ரீம் கோர்ட்டுக்கு நகர உள்ளது.

    பதவி விஷயத்தில் சமரசமாக செல்லலாம் என்று முதலில் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அதை ஏற்காத ஓ.பன்னீர்செல்வம் சட்டத்தை நாடி சென்றார்.

    தற்போது தனக்கு பெரும்பாலான ஆதரவு இல்லை என்று தெரிந்ததும், பேச்சுவார்த்தைக்கு ஓ.பி.எஸ். தயாராகிறார். ஆனால் இதை ஏற்காத எடப்பாடி பழனிசாமி சட்டத்தை நாடி சென்று கொண்டிருக்கிறார். இதனால் டெல்லி சுப்ரீம் கோர்ட்டு எத்தகைய முடிவு எடுக்கும் என்பதில் அனைத்து தரப்பினரிடமும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    ஏற்கனவே டெல்லி சுப்ரீம் கோர்ட்டு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. எனவே பழைய பாணியில் மீண்டும் ஆவணங்கள் அனைத்தையும் சமர்பிக்க எடப்பாடி பழனிசாமி தயாராகி வருகிறார். அந்த ஆவணங்கள் அனைத்தையும் முறியடிக்கும் வகையில் புதிய பாணியில் வாதாட ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் முடிவு செய்துள்ளனர்.

    இதற்காக ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் நேற்று மாலை முதல் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த தொடங்கினார்கள். நீண்ட நேரம் இந்த ஆலோசனை நடந்தது. அப்போது பல்வேறு யோசனைகள் தெரிவிக்கப்பட்டன.

    இன்று (சனிக்கிழமை) 2-வது நாளாக ஓ.பன்னீர் செல்வம் சென்னையில் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யும்போது எத்தகைய அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது பற்றி இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    டெல்லி சட்ட நிபுணர்களிடமும் கருத்துகள் பெற ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் முடிவு செய்துள்ளனர். நிபுணர்கள் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில் மேல்முறையீட்டு மனுவை தயாரிக்க உள்ளனர். அடுத்த வாரமே மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.

    டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு எப்படி வந்தாலும், தற்போது ஓ. பன்னீர்செல்வம் இக்கட்டான சூழ்நிலையில் இருப்பது உறுதியாகி இருக்கிறது. சென்னை ஐகோர்ட்டு நேற்று வெளியிட்ட தீர்ப்பின் அடிப்படையில் பார்த்தால் தற்போது ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளராகவோ எதிர்க்கட்சி துணைத் தலைவராகவோ இல்லை.

    இன்னும் சொல்லப்போனால் ஜூலை 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில்கூட கிடையாது. எனவே கட்சி தேர்தலில் கூட அவர் போட்டியிட முடியாது.

    அ.தி.மு.க.வில் செய்யப்பட்டுள்ள சட்ட விதிகள் திருத்தத்தின்படி பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுபவரை 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய வேண்டும். 10 மாவட்ட செயலாளர்கள் வழி மொழியவேண்டும். இதனால் ஓ.பன்னீர்செல்வம் கட்சி தேர்தலிலும் வெற்றி பெற முடியாத சூழ்நிலையே உள்ளது.

    கோர்ட்டு தீர்ப்புகளுக்கு பிறகு தேர்தல் ஆணையம் மட்டுமே அ.தி.மு.க.வின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். தற்போதைய சூழ்நிலையில் பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட ஆவணங்கள் தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்கப்பட்டுள்ளன.

    பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கையெழுத்திட்டு இருப்பதால், ஓ.பன்னீர்செல்வத்தின் வாதங்களை தேர்தல் ஆணையம் ஏற்குமா? என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    நேற்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வெளியானதும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இனிப்புகள் வழங்கிகொண்டாடினார்கள். ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்திலும் நேற்று இந்த கொண்டாட்டம் சற்று அதிகமாகவே காணப்பட்டது. இது அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான மனநிலை இருப்பதை காட்டுவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

    Next Story
    ×