search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வங்கி கடனை கட்ட முடியாததால் பழனி விடுதியில் கேரள தம்பதி தற்கொலை
    X
    தற்கொலை செய்த சுகுமாறன்-சத்யபாமா.

    வங்கி கடனை கட்ட முடியாததால் பழனி விடுதியில் கேரள தம்பதி தற்கொலை

    • வங்கியில் வாங்கிய கடனை கட்ட முடியாததால் பழனி விடுதியில் கேரளாவைச் சேர்ந்த தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
    • இதனையடுத்து அவர்களது உடல்களை பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    பழனி:

    கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சுகுமாறன் (வயது 66). இவரது மனைவி சத்தியபாமா (62). இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். அவர்களில் 2 மகன்கள் துபாயில் வசித்து வருகின்றனர். ஒருவர் மட்டும் பாலக்காட்டில் அவரது மனைவியுடன் வசித்து வருகிறார்.

    விவசாய கூலி வேலை பார்த்து வந்த சுகுமாறன் தனது குடும்ப தேவைக்காக வங்கியில் கடன் வாங்கி இருந்தார். அதனை அடைக்க முடியாமல் கஷ்டப்பட்டு வந்தார். தனது பிள்ளைகளிடம் இது குறித்து கேட்டும் அவர்கள் உதவி செய்ய முன்வரவில்லை.

    இதனால் மனமுடைந்த அவர்கள் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். நேற்று கேரளாவில் இருந்து பழனிக்கு வந்தனர்.

    மாலையில் பழனி மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு அடிவாரத்தில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கினர். பின்னர் இரவில் தங்கள் உறவினர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் தெரிவித்து விட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்தனர்.

    மேலும் தங்கள் தற்கொலைக்கான காரணம் குறித்தும் உருக்கமான கடிதம் எழுதி வைத்திருந்தனர். இன்று காலை அவர்களது அறை திறக்கப்படாததால் விடுதி ஊழியர்கள் சந்தேகத்தின் பேரில் பழனி அடிவாரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அறையை உடைத்து பார்த்த போது தூக்கு மாட்டிய நிலையில் இறந்து கிடந்தனர்.

    இதனையடுத்து அவர்களது உடல்களை பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர்களது உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. கடன் தொல்லையால் வயதான தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×