search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறந்த இந்தியாவை உருவாக்கும் அக்னிபாத் அருமையான திட்டம்- ஜி.கே.வாசன் புகழாரம்
    X

    சிறந்த இந்தியாவை உருவாக்கும் அக்னிபாத் அருமையான திட்டம்- ஜி.கே.வாசன் புகழாரம்

    • இளைஞர்களுக்கும், இந்திய நாட்டின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் இந்த ‘அக்னிபாத்’ திட்டத்தை தொலைநோக்கு பார்வையோடு சிந்தித்து செயல்படுத்தும் மத்திய அரசின் முயற்சிக்கு பாராட்டுகள், வாழ்த்துக்கள்.
    • நாட்டின் பாதுகாப்பையும், இளைஞர்களின் வாழ்வையும் மேம்படுத்துவதற்கான இந்த உயர்ந்த திட்டத்தை, அரசியல் நோக்கத்திற்காக போராட்டங்கள் மூலம் இளைஞர்களை திசை திருப்ப கூடாது.

    சென்னை:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்திய ராணுவத்தில் 'அக்னிபாத்' திட்டம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவது மட்டுமல்ல நல்ல தேச பக்தியுள்ள, நேர்மையான, கட்டுக்கோப்பான, செயல் திறன் மிக்க இளைஞர்களை உருவாக்கி, இந்த தேசத்தின் பாதுகாப்பை மட்டுமல்லாமல் சிறந்த இந்தியாவை உருவாக்க அவர்களை வடிவமைக்க கூடிய ஓர் அருமையான திட்டம் என்றால் அது மிகையாகாது.

    தேசத்தை வலுப்படுத்த இளைஞர்களின் சக்தி மிகத்தேவை. அந்த தேவையை முறையாக நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் பயனுள்ளதாக கட்டமைக்க மத்திய அரசு முயற்சியை மேற்கொண்டுள்ளது.

    இந்த திட்டம் ராணுவத்தில் புதுமையையும், புது உத்வேகத்தையும் ஏற்படுத்துவதோடு இளைஞர்களின் பங்களிப்பால் நாட்டை வல்லரசாக மாற்றக்கூடிய ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

    இளைஞர்கள் குறுகிய காலத்தில் தங்களை பொருளாதார ரீதியாக வளர்த்துகொள்ளவும், பணிக்குப் பின்னர் அவர்களின் திறமைக்கு ஏற்ப ராணுவத்திலேயோ அல்லது பல்வேறு அரசுப் பணியிலேயோ, தனியார் துறை பணியிலேயோ அமைப்பதற்கு மிகுந்த வாய்ப்புள்ளது.

    குறுகிய காலத்தில் பணி ஓய்வு என்று இல்லாமல் தொடர் பணிக்கும் வழிவகுக்கிறது என்பது இத்திட்டத்தின் தனிச்சிறப்பாக அமைந்துள்ளது.

    இளைஞர்களுக்கும், இந்திய நாட்டின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் இந்த 'அக்னிபாத்' திட்டத்தை தொலைநோக்கு பார்வையோடு சிந்தித்து செயல்படுத்தும் மத்திய அரசின் முயற்சிக்கு பாராட்டுகள், வாழ்த்துக்கள்.

    நாட்டின் பாதுகாப்பையும், இளைஞர்களின் வாழ்வையும் மேம்படுத்துவதற்கான இந்த உயர்ந்த திட்டத்தை, அரசியல் நோக்கத்திற்காக போராட்டங்கள் மூலம் இளைஞர்களை திசை திருப்ப கூடாது. உண்மையான தேசபக்தியும், சமூக சிந்தனையும் கொண்ட இளைஞர்களை சிறந்த பணிக்காக ஒன்று திரட்டும் இந்த திட்டத்திற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×