search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுத்தேர்வில் தோல்வி- ஒரே நாளில் 11 மாணவர்கள் தற்கொலை
    X

    பொதுத்தேர்வில் தோல்வி- ஒரே நாளில் 11 மாணவர்கள் தற்கொலை

    • தேர்வு தோல்வி எதிரொலியாக 28 பேர் தற்கொலை முயற்சி செய்துள்ளனர்.
    • அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 4 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் நடந்து முடிந்த 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான முடிவு நேற்று வெளியாகின. இதில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 8 லட்சத்து 37 ஆயிரத்து 311 மாணவ-மாணவிகள் எழுத பதிவு செய்து இருந்தனர். அவர்களில் 3 லட்சத்து 84 ஆயிரத்து 655 பேர் மாணவர்கள், 4 லட்சத்து 21 ஆயிரத்து 622 பேர் மாணவிகளும் என மொத்தம் 8 லட்சத்து 6 ஆயிரத்து 277 பேர் தேர்வு எழுதினார்கள். அந்த வகையில் 31 ஆயிரத்து 44 பேர் தேர்வை எழுதவில்லை.

    பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதியவர்களில், 7 லட்சத்து 55 ஆயிரத்து 998 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். இதில் மாணவிகள் 4 லட்சத்து 6 ஆயிரத்து 105 பேரும், மாணவர்கள் 3 லட்சத்து 49 ஆயிரத்து 893 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்களைவிட மாணவிகள் 5.36 சதவீதம் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 93.76 ஆகும்.

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வை பொறுத்தவரையில், 9 லட்சத்து 55 ஆயிரத்து 139 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதில் 9 லட்சத்து 12 ஆயிரத்து 620 பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். 42 ஆயிரத்து 519 பேர் தேர்வு எழுதவில்லை.

    தேர்வு எழுதியவர்களில், 4 லட்சத்து 27 ஆயிரத்து 73 மாணவர்கள், 3 லட்சத்து 94 ஆயிரத்து 920 மாணவிகள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 994 பேர் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். இதில் மாணவர்களை விட மாணவிகள் 8.55 சதவீதம் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 90.1 ஆகும்.

    இந்த நிலையில், பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு தனிக்கவனம் செலுத்தி ஆலோசனைகளை வழங்க கல்வித்துறை தீவிரமாக செயல்பட்டு வரும் சூழலில், பொதுத்தேர்வில் தோல்வி எதிரொலியாக தமிழ்நாட்டில் ஒரேநாளில் 11 பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. தற்கொலை செய்துகொண்ட மாணவர்களில் 10 பேர் அரசு பள்ளியை சேர்ந்தவர்கள்.

    தேர்வு தோல்வி எதிரொலியாக 28 பேர் தற்கொலை முயற்சி செய்துள்ளனர். அவர்களில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்கள் 16 பேரும், தனியார் பள்ளி மாணவர்கள் 12 பேரும் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர்.

    இந்த தற்கொலை சம்பவம் பெரும்பாலும் வடமாவட்டங்களில் நடந்துள்ளது. சென்னை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலம், கிருஷ்ணகிரி மற்றும் கோயம்புத்தூர், அரியலூர், கரூர், திருவாரூர் ஆகிய 14 மாவட்டங்களில் நடந்துள்ளது. இதில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 4 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

    தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் 28 மாணவர்களின் நிலை என்ன என்பது குறித்தும் கல்வித்துறை அவ்வப்போது தகவல்களை சேகரித்து வருகின்றன.

    Next Story
    ×