search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    3 ஏக்கர் பரப்பளவில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
    X

    3 ஏக்கர் பரப்பளவில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

    • சேலம் மாவட்டம், ஓமலூர் தாலுகாவில், உள்ள கோட்ட கவுண்டம்பட்டி, ஊராட்சி பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • இதனால் சாக்கடை கால்வாய் வசதி இல்லாமல் போனது, மறுபுறம் மழை நீர் செல்ல கால்வாய் வசதி இல்லாத காரணத்தினால் அங்கு தண்ணீர் தேங்கி உள்ளது.

    கருப்பூர்:

    சேலம் மாவட்டம், ஓமலூர் தாலுகாவில், உள்ள கோட்ட கவுண்டம்பட்டி, ஊராட்சி பகுதியில் சேலம், ஓமலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுங்க சாவடி (டோல்கேட்) எதிரில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் அரசு மற்றும் தனியார் நிலங்களில் அண்மையில் பெய்த மழை நீர் ஏரி போல் தேங்கியுள்ளது.

    இதனால் அந்த வழியாக கோட்ட கவுண்டம்பட்டி பகுதிகளில் பள்ளி, கல்லூரிக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள், மாணவர்கள், தவித்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மணி, ராம், ஈஸ்வரன் ஆகியோர் கூறியதாவது:-

    நெடுஞ்சாலைத் துறையினர் கடந்த 2 ஆண்டிற்கு முன்பு புதியதாக சாலை அமைத்தனர் அப்பொழுது 2 புறமும் உள்ள சாக்கடை கால்வாய்களை அப்புறப்படுத்திவிட்டு அதன் மீது புதிய தார்சாலை அமைத்தனர்.

    இதனால் சாக்கடை கால்வாய் வசதி இல்லாமல் போனது, மறுபுறம் மழை நீர் செல்ல கால்வாய் வசதி இல்லாத காரணத்தினால் அங்கு தண்ணீர் தேங்கி உள்ளது. மேலும் சுங்க சாவடியில் கட்டணம் செலுத்த வாகன ஓட்டிகள் இந்தச் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

    தற்போது தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் 2 கிணறுகள் நீரில் மூழ்கி உள்ளது அந்த சாலையை பயன்படுத்தும் வெளியூரில் வாகன ஓட்டிகள் தெரியாமல் கிணற்றில் விழும் அபாயம் உள்ளது, கொசு உற்பத்தியாகி பொதுமக்களுக்கு மலேரியா, டெங்கு காய்ச்சல்கள் பரவி வருகிறது.

    இங்கு தேங்கி உள்ள மழை நீரை அகற்ற நெடுஞ்சாலை துறை, ஓமலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×