search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்திருப்பேரையில் கிடப்பில் போடப்பட்ட சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை
    X

    நெல்லை-திருச்செந்தூர் சாலையில் பஸ் செல்லும்போது தூசி மண்டலமாக காட்சி அளிப்பதை படத்தில் காணலாம்.


    தென்திருப்பேரையில் கிடப்பில் போடப்பட்ட சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை

    • கடந்த ஒரு மாதமாக ரோடு வேலையை நிறுத்தி கிடப்பில் போடப்பட்டுள்ளது.
    • தூசி மற்றும் புகை காரணமாக முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாமலும் இரவு நேரங்களில் தடுமாற்றத்துடன் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

    தென்திருப்பேரை:

    நெல்லை- திருச்செந்தூர் மாநில நெடுஞ்சாலை 56 கிலோ மீட்டர் நீளமுடையது. நெல்லைக்கும், திருச்செந்தூ ருக்கும் இடையே அரசு மற்றும் தனியார் பஸ்கள் சென்று வருகிறது.

    இச்சாலையில் வி.எம்.சத்திரம், கிருஷ்ணாபுரம், செய்துங்கநல்லூர், கருங்குளம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, தென் திருப்பேரை, குரும்பூர், சோனகன்விளை, குமாரபுரம் போன்ற ஊர்களை சேர்ந்த மாணவ- மாணவிகள், பொதுமக்கள் அதிக அளவில் சென்று வருகிறார்கள்.

    மேலும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கும் பக்தர்கள் அதிக அளவில் சென்று திரும்பி வருகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் காலையிலும், மாலையிலும் அதிக அளவில் வேலைக்கு செல்வோர் சென்று திரும்பி வருகிறார்கள். ஆனால் இந்த நேரத்தில் பஸ்சில் நிற்ககூட இடமில்லாமல் படியில் ஆண்களும், பெண்களும், வயதானவர்களும் தொங்கிய நிலையில் சென்று வருகிறார்கள்.

    ஒரு சில குறிப்பிட்ட பஸ்கள் தொலைதூரம் செல்லும் ராஜபாளையம் உட்பட பஸ்கள் தென்திருப்பேரை போன்ற பஸ் நிறுத்தங்களில் நிறுத்துவதில்லை. இதனால் பொதுமக்கள் அதிக நேரம் காத்திருந்து அதற்கு அடுத்த பஸ்களில் நின்று கொண்டும் படிகளில் தொங்கியபடியும் பயணித்து வருகிறார்கள். எனவே காலை, மாலை நேரங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க அதிக அளவில் பஸ்கள் விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த ரோடு குறுகலாகவும், அதிக அளவில் வளைவுகளுமாக இருந்தது. இந்த ரோட்டில் நவதிருப்பதி தலங்கள், திருச்செந்தூர் முருகன்கோவில், குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோவில் போன்ற வழிபாட்டு தலங்களுக்கு ஏராளமான பக்தர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் சென்று வருகிறார்கள்.

    இந்த ரோட்டை கடந்த சில வருடங்களுக்கு முன்பு அகலப்படுத்தும் பணிக்கான டெண்டர் விடப்பட்டு தனியார் நிறுவனம் மூலம் அகலப்படுத்தும் பணி நடைபெற்றது. பாலங்கள் மற்றும் ஒரு சில இடங்களில் துண்டு துண்டாக ரோடு அகலப்படுத்தும் பணி நடைபெற்று வந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக ரோடு வேலையை நிறுத்தி கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    இதனால் சாலையில் போடப்பட்டுள்ள கற்கள் பெயர்ந்தும் குண்டும் குழியுமாகவும் உள்ளதால் வாகனத்தில் செல்பவர்கள் தூசி மற்றும் புகை காரணமாக முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாமலும் இரவு நேரங்களில் தடுமாற்றத்துடன் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. எனவே அதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×