என் மலர்
மயிலாடுதுறை
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அடுத்து காளி ஊராட்சியில் ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு விலையில்லா அரிசி வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளிலிருந்து நல்ல அரிசியை இருசக்கர வாகனத்தில் மூட்டை மூட்டையாக கட்டிக்கொண்டு கிராமம் கிராமமாக கள்ள சந்தை மார்க்கெட்டில் விற்பதாகவும், தரமற்ற அரிசியை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
காளி ஊராட்சி ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக கூறி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரேஷன் கடை அதிகாரி கடையை பூட்டியதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த மணல்மேடு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்கள் உடன்படாததால் பல மணி நேரத்திற்கு மேலாக காளி - மணல்மேடு செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போலீசார் மேல் அதிகாரிகளிடம் பேசி தரமுள்ள அரசி வழங்குவதற்கான நடவடிக்கையும், கள்ள சந்தையில் விற்கப்படும் அரிசியை தடுக்க முயற்சி செய்வதாகவும் உத்தரவாதம் அளித்துள்ளனர். அதன்பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். 100 நாள் வேலை முறைகேடுகளை கண்டித்தும், ரேசன் கடைகளில் தரமற்ற அரிசி வழங்குவதை கண்டித்தும் அடுத்தடுத்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றுள்ளதால் மாவட்ட கலெக்டர், காளி ஊராட்சியை தனி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மயிலாடுதுறை அடுத்து காளி ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் தொடர்ந்து வேலை தராமல் மாதத்தில் ஒரு வாரம் மட்டும் பணி கொடுத்துவிட்டு மீதம் 3 வாரங்களில் கொடுக்காமல் மறுத்து வருவதாக வேலை செய்யும் மக்கள் கூறுகின்றனர். இதுதொடர்பாக அதிகாரியிடம் மக்கள் கேட்டபோது 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் இப்பகுதியில் இப்பொழுது வேலை இல்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஆனால் ஒரு மாத காலமாக வேலை நடைபெற்றததாக அனைவரின் பெயரில் பில் போடப்பட்டு பணம் எடுத்ததாக கூறி பொதுமக்கள் காளி ஊராட்சி, ஒன்றிய துவக்கப்பள்ளி அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த மணல்மேடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். வேலை தர நடவடிக்கை எடுப்பதாக உத்தரவு அளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. 100 நாள் வேலையில் ஊதியம் வழங்குவதில் முறைகேடு ஏற்பட்டதைத் தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள புத்தூர், திருமயிலாடி கிராமத்தில் சூதாட்ட கிளப் இயங்கி வருவதாக புகார்கள் வந்தது. நேற்று இரவு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் புத்தூர் திருமயிலாடியில் செயல்பட்டு வந்த சூதாட்ட கிளப்பில் அதிரடியாக புகுந்து சோதனையிட்டனர்.
அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய கடலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 24), சீர்காழி அருகே உள்ள பாதரக்குடி கிராமத்தைச் சேர்ந்த சந்துரு (42) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
மேலும் அங்கு சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட சேர்கள், ஸ்டூல்கள், டேபிள்கள் மற்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து கைது செய்யப்பட்ட சந்துரு, மண்டகண்டன் மற்றும் பறிமுதல் செய்த பொருட்களை தனிப்படை போலீசார் கொள்ளிடம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் தப்பி ஓடிய கேசவன், சேலம் கிராமத்தைச் சேர்ந்த சுதாகர், காட்டுமன்னார்குடி பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி ஆகியோரை தேடி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை காலங்களில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. தற்போது பருவமழை தீவிரமாக பெய்து வரும் நிலையில் டெங்கு கொசு பரவாமல் தடுக்க ஒருவார கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் தொடங்கி உள்ளது.
அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை நகரில் டெங்கு கொசுக்களால் பாதிக்கப்படும் பகுதி என்று கண்டறியப்பட்ட பகுதிகளில் மாவட்ட சுகாதார துணை இயக்குனர் பிரதாப் தலைமையில் மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் பாலு மற்றும் அதிகாரிகள் வீடு, வீடாக சென்று சோதனை செய்து கள ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த பணி 60 களப்பணியாளர்களுடன் தொடங்கியது. நாளொன்றுக்கு 6 வார்டுகள் வீதம் ஒரு வார காலத்திற்குள் நகரம் முழுவதும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும், பிளாஸ்டிக் கப்புகள் டயர்கள், தேங்காய் ஓடுகள், பிரிட்ஜ் எந்திரத்தின் பின்புறம் ஆகியவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், மாடிகளில் தண்ணீர் வழிந்தோடும் பகுதிகளில் குப்பைகள் இல்லாமல் சுத்தமாக வைத்துக் கொண்டால் டெங்கு கொசு உற்பத்தியாவது தடுக்கப்படும் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
மேலும் டெங்கு கொசு மருந்து அழிக்கப்பட்டதுடன் நகராட்சி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். அப்போது நகர் நல அலுவலர் மலர்மன்னன், சுகாதார ஆய்வாளர் பிச்சமுத்து, களப்பணி உதவியாளர் கணேசன், பூச்சியியல் வல்லுனர் சிங்காரவேலு மற்றும் களப்பணியாளர்கள் உடனிருந்தனர்.






