search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தோகைமலை அருகே வேன் கவிழ்ந்து விபத்து
    X

    தோகைமலை அருகே வேன் கவிழ்ந்து விபத்து

    • வழக்கம் போல் நேற்றும் காலையில் தொழிலாளர்களை ஏற்றி சென்ற வேன் மாலையில் வெள்ளியணை அருகே உள்ள ஜெகதாபி வழியாக கொசூருக்கு சென்று கொண்டிருந்தது.
    • ஜெகதாபி அருகே பின்னால் வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக வேன் டிரைவர் சாலையின் ஓரமாக வேனை திருப்பியுள்ளார்.

    கரூர்

    கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள கொசூர் பகுதியிலிருந்து தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு தனியார் வேன் ஒன்று, கரூரில் இயங்கும் ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்திற்கு காலையில் சென்று, பின் பணி முடித்து மாலையில் அழைத்து வருவது வழக்கம்.

    வழக்கம் போல் நேற்றும் காலையில் தொழிலாளர்களை ஏற்றி சென்ற வேன் மாலையில் வெள்ளியணை அருகே உள்ள ஜெகதாபி வழியாக கொசூருக்கு சென்று கொண்டிருந்தது.

    வேனில் பெண் தொழிலாளர்கள் 12 பேர் உட்பட 15 பேர் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் ஜெகதாபி அருகே பின்னால் வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக வேன் டிரைவர் சாலையின் ஓரமாக வேனை திருப்பியுள்ளார். அப்போது வேன் எதிர்பாராதவிதமாக சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் வேனுக்குள் இருந்த தொழிலாளர்கள் அலறி துடித்தனர். இதைப்பார்த்த அப்பகுதியில் இருந்தவர்கள் வேனுக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் படுகாயமடைந்த மகாலட்சுமி, பூங்கோதை சரஸ்வதி ஆகிய 3 பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    லேசான காயமடைந்த மற்றவர்கள் முதலுதவி சிகிச்சைக்கு பின் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து வெள்ளியணை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×