search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாளை ஆயுதப்படை மைதானத்தில் கொண்டாட்டம் சுதந்திர தினவிழாவில் ரூ.6.77 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்- கலெக்டர் விஷ்ணு வழங்கினார்

    • நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளை ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம் நடைபெற்றது.
    • விழாவில், அரசின் அனைத்து துறைகளின் சார்பிலும் பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 77 ஆயிரத்து 300 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விஷ்ணு வழங்கினார்

    நெல்லை:

    நாட்டின் 75-வது சுதந்திர தினவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

    தேசிய கொடி ஏற்றினார்

    நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளை ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு கலந்து கொண்டு காலை 9.05 மணிக்கு தேசிய கொடி ஏற்றினார்.

    தொடர்ந்து கலெக்டர் விஷ்ணு, போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆகியோர் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர். அதன்பின்னர் மூவர்ண பலூன்களை கலெக்டர் விஷ்ணு பறக்கவிட்டார். பின்னர் திறந்த ஜீப்பில் நின்றபடி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    நற்சான்றிதழ்கள்

    விழாவில், அரசின் அனைத்து துறைகளின் சார்பிலும் பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 77 ஆயிரத்து 300 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விஷ்ணு வழங்கினார்.

    மேலும் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு நற்சான்றிதழ்களை அவர் வழங்கினார். வீரதீர செயல்கள் புரிந்த 253 பேருக்கும், சமூக தொண்டாற்றியவர்களுக்கும் நற்சான்றுகள் வழங்கப்பட்டன.

    கலை நிகழ்ச்சிகள்

    தொடர்ந்து சந்திப்பு மீனாட்சிபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலை நிகழ்ச்சி நடந்தது. கரகம், சிலம்பம் உள்ளிட்ட விளையாட்டுகள் நடைபெற்றன. இதில் சுமார் 1,315 பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார், மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, சப்-கலெக்டர் ரிஷப், ஆர்.டி.ஓ. சந்திரசேகர், துணை கமிஷனர்கள் சீனிவாசன், அனிதா, சரவணகுமார், திட்ட அலுவலர் பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மாநகராட்சி

    நெல்லை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் காலை 6.45 மணிக்கு மேயர் சரவணன் தலைமையில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி அதிகாரிகள், பொறியாளர்கள், ஊழியர்களுக்கு நற்சான்றி தழ்கள் வழங்கப்பட்டன.

    இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, துணை மேயர் கே.ஆர்.ராஜூ, உதவி கமிஷனர்கள், சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் தலைவர் தச்சை கணேச ராஜா தலைமையிலும், சந்திப்பு கூட்டுறவு பேரங்காடியில் அதன் சேர்மன் பல்லிக்கோட்டை செல்லத்துரை தலைமையிலும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.

    Next Story
    ×