search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரியில் தேயிலை செடிகளில் கொப்புள நோய் தாக்குதல்
    X

    கோத்தகிரியில் தேயிலை செடிகளில் கொப்புள நோய் தாக்குதல்

    • 60 ஆயிரம் சிறு, குறு விவசாயிகள் தேயிலை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • இளம் தண்டு மற்றும் கொழுந்துகளை கொப்புள நோய் தாக்குகிறது.

    அரவேணு

    நீலகிரி மாவட்ட மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. சுமார் 60 ஆயிரம் சிறு, குறு விவசாயிகள் தேயிலை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. அத்துடன் மேகமூட்டமான சீதோஷ்ண நிலை நிலவுவதால், தேயிலை செடிகளை கொப்புள நோய் தாக்கி வருகிறது.

    இதனால் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்பட்டு உள்ளது. போதிய சூரிய வெளிச்சம் இல்லாததாலும், இளம் தண்டு மற்றும் கொழுந்துகளை கொப்புள நோய் தாக்குகிறது. இதனால் 50 சதவீதம் வரை மகசூல் குறையும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    ஏற்கனவே தேயிலையின் கொள்முதல் விலை வீழ்ச்சியடைந்து உள்ள நிலையில், தேயிலை செடிகளில் கொப்புள நோய் பாதிப்பும் ஏற்படுவதால் தேயிலை விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர்.

    இதுகுறித்து தேயிலை வாரிய அதிகாரிகள் கூறியதாவது:- தேயிலை செடிகளில் கொப்புள நோயை கட்டுப்படுத்த தேயிலை தோட்டங்களில் அதிக நிழல் தரும் மரங்கள் இருக்க வேண்டும். மேலும் அதன் கிளைகளை அகற்றி, தேயிலை செடிகள் மீது சூரிய வெளிச்சம் படுமாறு செய்ய வேண்டும்.

    செடிகளில் கொப்புள நோய் பாதிப்பது தெரியவந்தால், பாதிக்கப்பட்ட இலைகள் மற்றும் கொழுந்துகளை கவாத்து மூலம் அகற்றிவிட வேண்டும். எக்ஸோ கன்சோல் 200 மில்லி லிட்டர் மற்றும் காப்பர் ஆக்ஸி குளோரைடு 210 கிராம் ஆகியவற்றின் கலவையை 7 நாட்கள் இடைவெளி விட்டு தெளிப்பான் மூலம் தேயிலை செடிகளுக்கு தெளிக்க வேண்டும்.

    இதேபோல பிராப்பிகானாசோல் 125 மில்லி லிட்டர் மற்றும் காப்பர் ஆக்ஸிகுளோரைடு 210 கிராம் கலவையை தெளிப்பதன் மூலம் இந்த நோயை கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×