search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு- மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பு

    • தீபாவளி பண்டிகையையொட்டி புத்தாடைகள், பட்டாசுகள் வாங்க பொதுமக்கள் கடைவீதிகளில் அலைமோதி வருகின்றனர்.
    • மாநகர பகுதிகள் முழுவதும் 2 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    நெல்லை:

    தீபஒளி திருநாளான தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி(திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது.

    விற்பனை மும்முரம்

    தீபாவளி பண்டிகையையொட்டி புத்தாடைகள், பட்டாசுகள் வாங்க பொதுமக்கள் கடைவீதிகளில் அலைமோதி வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக தீபாவளி விற்பனை சூடுபிடித்து உள்ளது. தீபாவளிக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் இன்று மாநகர பகுதியில் பொருட்கள் வாங்க கூட்டம் மேலும் அதிகரித்துள்ளது.

    நெல்லை மாநகரப்பகுதியில் ஜவுளிக் கடைகளில் காலை 9 மணி முதல் நள்ளிரவு வரை அலை, அலையாய் மக்கள் கூட்டம் வந்த வண்ணம் உள்ளது.

    போக்குவரத்து நெருக்கடி

    அதிகளவு வியாபாரத்தால் பஸ்கள், கார்கள், ஆட்டோக்கள் வரத்தும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பல்வேறு சாலையில் நீண்ட தூரம் வாடிக்கை யாளர்களின் கார்கள் அணிவகுத்து போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.

    குறிப்பாக நெல்லை டவுன் ரதவீதிகள், வண்ணார்பேட்டை, பாளை, சமாதானபுரம் உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    தீபாவளி பண்டிகை யொட்டி நடைபெறும் வியாபார கூட்ட நெரிசலை பயன்படுத்தி சிலர் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் உத்தரவின் பேரில் துணை கமிஷனர்கள் சீனிவாசன், சரவணக்குமார் மேற்பார்வையில் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாநகர போலீசார் 1200 பேர் மற்றும் பட்டாலியன் போலீசார், ஊர்க்காவல்படையினர் 800 பேர் என மாநகர பகுதிகள் முழுவதும் 2 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    மேலும் டவுன் ரதவீதிகள், வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலம், முருகன்குறிச்சி சாலை, பாளை சமாதானபுரம், மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் உயர்கோபுரம் அமைத்தும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள். டவுன் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட காமிராக்கள் மூலமும் குற்றச்சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் குற்றச்சம்பவங்களில் ஏற்கனவே ஈடுபட்ட பழைய குற்றவாளிகளை அடையாளம் காணும் வகையில் சிறப்பு தொழில்நுட்ப வசதிகள் செய்யப்பட்டுளது.

    இதேபோல் நெல்லை மாவட்டத்தில் வள்ளியூர், அம்பை, களக்காடு, திசையன்விளை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஜவுளி மற்றும் நகை மற்றும் பாத்திர கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது. மாவட்டத்தின் புறநகர் பகுதியிலும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×