search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேர்வு
    X
    தேர்வு

    தமிழகத்தில் நாளை நடைபெறும் குரூப்-2 தேர்வை 11.78 லட்சம் பேர் எழுதுகிறார்கள்

    ஹால் டிக்கெட்டுடன் ஆதார், பான், பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் ஒரிஜனல் அட்டையை எடுத்து வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழக அரசு துறைகளில் சார் பதிவாளர், நகராட்சி கமிஷனர் உள்ளிட்ட பதவிகள் குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக நடத்தப்படும் இந்த தேர்வுகள் தமிழகம் முழுவதும் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

    இந்த தேர்வை நாளை 11.78 லட்சம் பேர் எழுதுகிறார்கள். இவர்களில் 6.82 லட்சம் பேர் பெண்கள் ஆவர். தமிழ் வழியில் படித்த 80 ஆயிரம் பேரும் இந்த தேர்வை எழுத உள்ளனர்.

    தேர்வில் பொது தமிழ் பிரிவை 9.47 லட்சம் பேரும், பொது ஆங்கில பிரிவை 2.31 லட்சம் பேரும் தேர்வு செய்துள்ளனர். 38 மாவட்டங்களில் 3,012 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    எந்தவித குளறுபடிகளும் இல்லாமல் குரூப்-2 தேர்வை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக 300-க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். சுமார் 6,500 ஆய்வு குழுக்கள் நாளை களம் இறங்க உள்ளன.

    இவர்கள் தேர்வு நடைபெறும் மையங்களில் திடீரென புகுந்து ஆய்வு செய்வார்கள். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடியோ கிராபர்களும் தேர்வு மையத்தில் நாளை வீடியோ பதிவு செய்ய உள்ளனர். தேர்வின் போது முறைகேட்டில் ஈடுபடும் தேர்வர்கள் உடனடியாக தேர்வு மையத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். அவர்கள் மீது குற்ற நடவடிக்கை பாயும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் 7 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. 1.15 லட்சம் பேர் தேர்வை எழுத உள்ளனர்.

    மதுரையில் 64 ஆயிரத்து 85 பேரும், சேலத்தில் 63 ஆயிரம் பேரும், திருச்சியில் 50 ஆயிரம் பேரும், கோவையில் 45 ஆயிரம் பேரும் இந்த தேர்வை எழுத உள்ளனர்.

    காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த தேர்வில் பங்கேற்க 9 மணிக்கு பின்னர் வருபவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஹால் டிக்கெட்டுடன் ஆதார், பான், பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் ஒரிஜனல் அட்டையை எடுத்து வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்வு எழுதுவோர் பால் பாயிண்ட் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    Next Story
    ×