search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X
    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    சேலம் ஆத்தூரில் 18-ந்தேதி நடக்க இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு

    பருவநிலையை சுட்டிக்காட்டி, வானிலை ஆய்வு மையத்தினர் அன்றைய நாளில் கனமழை பெய்யக்கூடும் என அறிவித்திருப்பதால், பொதுமக்களின் நலன் கருதி, ஆத்தூர் பொதுக்கூட்டத்திற்கான தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டு மக்களின் பேராதரவுடன் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில், பத்தாண்டுகால இருளை விரட்டி, புதிய ஒளி தமிழ்நாடெங்கும் பரவிக் கொண்டிருக்கிறது.

    ஒவ்வொரு நாளும் உயர்வான திட்டங்கள். தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கான தகுதிமிகு சட்டங்கள், அரசின் அறிவிப்புகளை முழுமையாகச் செயல்படுத்தும் அர்ப்பணிப்பு, கடைசி மனிதருக்கும் பலன்கள் கிடைத்திடும் வகையில் நிர்வாகக் கட்டமைப்பு, அவற்றின் மீதான கண்காணிப்பு என இந்தியாவுக்கே வழிகாட்டும் ‘திராவிட மாடல்’ ஆட்சியை வழங்கி வருகிறோம். ‘ஓயாத உழைப்பின் ஓராண்டு’ எனும் தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் கழகத்தின் சார்பில் ஆட்சியின் சாதனைகளை விளக்கிப் பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    ஓராண்டுக்கு முன்பு, தேர்தல் முடிவுகள் வெளியான நேரத்தில், கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் கடுமையாக இருந்ததால் நன்றி அறிவிப்புக் கூட்டங்களையோ, வெற்றிவிழா மாநாட்டினையோ நடத்திட இயலவில்லை. ஓராண்டு காலத்தில் கொரோனா இரண்டாவது அலை மூன்றாவது அலை ஆகியவற்றைக் கட்டுப்படுத்தியதுடன், அனைத்து மக்களுக்குமான திட்டங்களை செயல்படுத்தி சாதனைகள் புரிந்த மனநிறைவோடு, மக்களைச் சந்திக்கும் நிகழ்வாக, இந்தப் பொதுக்கூட்டங்கள் அமைந்துள்ளன.

    ஆட்சியின் இலக்கணம், ‘சொன்னதைச் செய்வோம் செய்வதைச் சொல்வோம்’ என்று நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள் நமக்கு வழிகாட்டியிருக்கிறார். அதன் அடிப்படையில், ஓராண்டு காலத்தில் பல்வேறு துறைகளில் நிகழ்த்தப்பட்ட மகத்தான சாதனைகளை மிகச்சிறப்பான முறையிலே புத்தகங்களாக, மின்னணு வெளியீடுகளாக, காணொலிகளாக, துண்டறிக்கைகளாக, விளம்பரங்களாக வழங்கியிருக்கிறோம். அந்தச் சாதனைகளை நேரடியாக எடுத்துச் சொல்வது தனித்துவமானது; கழகத்திற்கும் மக்களுக்கும் உணர்வுப்பூர்வமான உறவுப் பாலமாக அமைவது.

    ஓயா உழைப்பின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்களின் பேராதரவுடனும் பங்கேற்புடனும் நடந்து வருவது குறித்த தகவல்கள், உங்களில் ஒருவனான எனக்கு உற்சாகம் தருவதுடன், மேலும் உழைத்திட ஊக்கம் அளிக்கிறது.

    மே 18-ம் நாளன்று, சேலம் மாவட்டம் ஆத்தூர் பொதுக்கூட்டத்தில் உங்களை நேரில் காணலாம் என்ற பேராவல் கொண்டிருந்தேன். கழகத்தின் முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு அவர்கள் அதற்கான முன்னேற்பாடுகளை முனைப்புடன் மேற்கொண்டார். பருவநிலையை சுட்டிக்காட்டி, வானிலை ஆய்வு மையத்தினர் அன்றைய நாளில் கனமழை பெய்யக்கூடும் என அறிவித்திருப்பதால், பொதுமக்களின் நலன் கருதி, ஆத்தூர் பொதுக்கூட்டத்திற்கான தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    தள்ளிப் போடப்பட்டாலும், உங்களை நான் சந்திக்க வருவதை இயற்கையாலும் நிச்சயம் தடுத்து விட முடியாது. ஒவ்வொரு நாளும் மக்களைச் சந்திப்பதும், அவர்களின் நலன்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதும் எப்போதும் தொடரும். ஓராண்டு காலத்தில் வெளிப்படுத்தி வரும் உழைப்பைத் தொடர்ந்து வெளிப்படுத்தி, ஓராயிரம் சாதனைகளை நிகழ்த்திட முடியும் என உறுதியுடன் நம்புகிறேன்.

    கோவை, நீலகிரி மாவட்டங்களில் நடைபெறும் அரசு விழாக்களில் விரைவில் பங்கேற்க இருக்கிறேன். அதனைத் தொடர்ந்து, கழகத்தின் சார்பிலான நிகழ்வுகளிலும் உங்கள் முகம் காண ஆவலுடன் இருக்கிறேன். முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் உழைத்திடுவோம். திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளைத் தொடர்ந்திடுவோம். அதனால் மக்கள் பெறும் பயன்களை எத்திசையும் முழங்கிடுவோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×