search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சாலைகளை விரிவாக்கும் திட்டம் - உடுமலையில் வாகனங்கள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

    பெரிய அளவிலான விரிவாக்க மேம்பாட்டுத்திட்டங்கள் எதுவும் உடுமலை உட்கோட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெறவில்லை.
    உடுமலை:

    நெடுஞ்சாலைத்துறை உடுமலை உட்கோட்டத்தின் கீழ் உடுமலை - பல்லடம், பொள்ளாச்சி - தாராபுரம் (ஒரு பகுதி) மாநில நெடுஞ்சாலைகள், உடுமலை - சின்னாறு, திருமூர்த்திமலை உள்ளிட்ட மாவட்ட முக்கிய  சாலைகள்,  மாவட்ட இதர சாலைகள் மற்றும் கிராம இணைப்பு சாலைகளும் வருகின்றன.

    இவை இந்த உட்கோட்ட பராமரிப்பில் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக அனைத்து சாலைகளிலும் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், சாலை விரிவாக்கம், சிறப்பு பராமரிப்பு, தரம் உயர்த்தி மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நெடுஞ்சாலைத்துறைக்கு சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றன.

    ஆனால் பெரிய அளவிலான விரிவாக்க மேம்பாட்டுத்திட்டங்கள் எதுவும் உடுமலை உட்கோட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெறவில்லை. இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை அனைத்து சாலைகளிலும் வாகன கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

    இதில் பெறப்படும் வாகன போக்குவரத்து விபரங்கள் அடிப்படையில் விரிவாக்கம் உள்ளிட்ட பணிகளுக்காக நெடுஞ்சாலைத்துறை உட்கோட்ட அதிகாரிகளால் அரசுக்கு கருத்துரு சமர்ப்பிக்கப்படும்.

    அதன்படி உடுமலை உட்கோட்டத்துக்குட்பட்ட 3 இடங்களில்  வாகன கணக்கெடுப்பு பணிகள் தொடங்கின. உடுமலை - பல்லடம் மாநில நெடுஞ்சாலையில் குடிமங்கலம் பகுதியில், நகரில் தளி ரோடு மற்றும் ஜல்லிபட்டியில் இக்கணக்கெடுப்பு தொடங்கி உள்ளது.

    நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளர் உள்ளிட்ட சிறப்புக்குழுவினர், 24 மணி நேரமும், அவ்வழியாக செல்லும் அனைத்து வகையான வாகனங்களையும் கணக்கெடுத்து வருகின்றனர்.

    இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில்:

    அனைத்து  சாலைகளிலும் 3 ஆண்டுக்கு ஒரு முறை துறை சார்பில் வாகன கணக்கெடுப்பு நடத்தப்படும். ஒரு ரோட்டில் 7 நாட்கள் வரை அவ்வழியாக செல்லும் அனைத்து வாகனங்கள் கணக்கிடப்படும். நெரிசலை கண்டறியும் வகையில் ஆண்டில், மே, செப்டம்பர் ஆகிய இரு கட்டமாக இக்கணக்கெடுப்பு நடக்கும்.

    உடுமலை உட்கோட்டத்தில் மாநில நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலைகளில்  இக்கணக்கெடுப்பு தொடங்கியது. அனைத்து சாலைகளிலும் பணிகள் நிறைவு பெற்ற பிறகு அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றனர்.

    உடுமலை பகுதியிலுள்ள பல சாலைகள் வாகன போக்குவரத்துக்கு ஏற்ப விரிவுபடுத்தப்படாமல் உள்ளது. குறிப்பாக மாவட்ட தலைமையிடமாக உள்ள திருப்பூருக்கு செல்லும் உடுமலை - பல்லடம் மாநில நெடுஞ்சாலையில் போக்குவரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது.

    அந்த சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது. அதே போல் உடுமலை - சின்னாறு வழியாக கேரளா மாநிலம் மூணாறு செல்லும் சாலை விரிவாக்கம், உடுமலை - செஞ்சேரிமலை, உடுமலை - ஆனைமலை சாலைகள் விரிவாக்க திட்டமும் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போதைய கணக்கெடுப்பு, கருத்துரு அடிப்படையில் விரைவில், அரசு நிதி ஒதுக்கீடு செய்யும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
    Next Story
    ×