search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொன்ற பெண் கைது

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சின்னக்கரைலட்சுமி நகர் பகுதியில் கடந்த 4-ந் தேதி வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    போலீசார் விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த ராமநாதன் மகன் கோபால்(வயது 35) என்பதும், கடந்த 10 வருடங்களாக பல்லடம் அருகேயுள்ள அருள்புரம் செந்தூரான் காலனியில் வசித்துக்கொண்டு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

    இந்த கொலை வழக்கு தொடர்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கோபாலை அவரது மனைவி சுசீலா கள்ளக்காதலன் மாரீஸ்வரன் என்பவருடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மாரீஸ்வரன், விஜய், மதன்குமார், மணிகண்டன், லோகேஸ்வரன், வினோத் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் .

    தலைமறைவாக சுசீலாவை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் நேற்று அவரை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அவர் கூறியதாவது:-

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்த கோபாலுக்கும் எனக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கொடைக்கானலில் சரியான வேலைவாய்ப்பு இல்லாததால் பல்லடம் அருள்புரத்திற்கு வந்தோம்.

    கோபால் பனியன் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். எங்களுக்கு 7 வயதில் ஒரு மகனும்,10 வயதில் ஒரு மகளும் உள்ளனர். குழந்தைகள் இருவரும் பெரியவர்கள் ஆனதால், அருகே உள்ள பனியன் தொழிற்சாலைக்கு நானும் வேலைக்கு சென்றேன். அந்த பனியன் கம்பெனியில் மேலாளராக பணிபுரிந்த தேனியைச் சேர்ந்த மாரீஸ்வரன் என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தோம். எனது கணவரை விட வயதில் சிறியவராக இருந்தாலும் கேட்டபோது துணிகள், பணம் தந்ததால் மாரீஸ்வரன் மீது எனக்கு தீராத காதல் உண்டானது.

    இதற்கிடையே என்னுடன் வந்து விடு, உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என மாரீஸ்வரன் அடிக்கடி வற்புறுத்தினார். கணவர் கோபால் இருப்பது இடையூறாக இருந்தது. அவரை தீர்த்துக்கட்டி விட்டால், இருவரும் சந்தோசமாக வாழலாம், என இருவரும் திட்டமிட்டோம். இதையடுத்து மாரீஸ்வரன் அவருடன் பணிபுரியும் நண்பர்களிடம் கூறி கோபாலை கொல்ல திட்டமிட்டனர். கடந்த 4-ந் தேதி, கணவருக்கு போன் செய்து குழந்தைக்கு துணி எடுக்க திருப்பூர் சென்று வரலாம் என்றும் இரவு 8 மணிக்கு வாருங்கள் என்று கூறினேன். இதனை நம்பிய அவரும் இரவு 8 மணிக்கு வந்து விடுகிறேன் என்று கூறினார். நான் கோபால் வருவதை மாரீஸ்வரனிடம் கூறினேன். அவர் நண்பர்களுடன் சேர்ந்து லட்சுமி நகர் பகுதியில் வந்த கோபாலை வழிமறித்து கத்தியால் குத்தி கொலை செய்தனர்.

    நான் சம்பவ இடத்திற்குச் சென்று யாருக்கும் சந்தேகம் வராதபடி கணவரின் உடலை பார்த்து கதறி அழுதேன். பின்னர் கொடைக்கானலுக்கு சென்று மறைந்து இருந்தேன். இந்த நிலையில் நேற்று வீட்டை காலி செய்வதற்காக பல்லடம் வந்தபோது போலீசார் என்னை கைது செய்தனர். இவ்வாறு விசாரணையில் அவர் தெரிவித்ததாக போலீசார் கூறினர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள குட்டி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
    Next Story
    ×