
அதன்படி இந்த வருடம் அக்னி நட்சத்திர விழா சென்னிமலை மலை அடிவாரத்தில் உள்ள இடும்பன் கோவிலில் விசேஷ அபிஷேகம் மற்றும் ஆராதனையுடன் நிகழ்ச்சி தொடங்கியது.
இன்று சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு சென்னிமலை மாரியம்மன் கோவிலில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்காவடி மற்றும் தீர்த்தக் குடங்களுடன் தட்டாங்காட்டுபுதூர், வெப்பிலி, அய்யம்பாளையம், புதுப்பாளையம், தோப்புப்பாளையம், மேலப்பாளையம் உள்பட பல்வேறு ஊர்கள் வழியாக மலையை சுற்றி கிரிவலம் புறப்பட்டனர்.
இன்று காலை 7 மணிக்கு மேல் சென்னிமலை மலைக் கோவிலில் கணபதி ஹோமம், பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் இன்று மாலை 6 மணிக்கு விநாயகர் வழிபாடு, கலச ஸ்தாபனம், தேவார திருமுறை, தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
முக்கிய நிகழ்ச்சியாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு சுப்பிரமணியசுவாமி மூலவர் மற்றும் உற்சவருக்கு சப்த நதி தீர்த்த அபிஷேகம் மற்றும் முக்கடல் தீர்த்த அபிஷேகம் நடைபெறுகிறது.
இதற்காக பக்தர்கள் கங்கை, யமுனை, சரஸ்வதி, சிந்து, கிருஷ்ணா, கோதாவரி, தாமிரபரணி ஆகிய நதிகளுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்துள்ளனர்.