
ஈரோடு மாவட்டம், பவானி மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அசைவ உணவகங்களில் கெட்டுப்போன இறைச்சி, எண்ணெய், நிறமூட்டும் பொடிகள் மற்றும் ரசாயனப் பொருள்கள் பயன்படுத்தப்படுவதாக எழுந்த புகாரின் பேரில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் என்.சதீஸ்குமார், எம்.லட்சுமி ஆகியோர் பவானி புதிய பஸ் நிலையம், மேட்டூர் சாலை, அந்தியூர் பிரிவு உள்பட பல்வேறு பகுதிகளில் 6 அசைவ உணவகங்களில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, கெட்டுப்போன கோழி இறைச்சி 5 கிலோ, செயற்கையாக நிறமூட்டும் பொடி, கெட்டுப்போன எண்ணெய், தர்பூசணி விதைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதோடு, உணவுப் பாதுகாப்பு விதிகளை மீறி இயங்கிய உணவகங்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
உணவு பாதுகாப்பு விதிகளுக்குப் புறம்பாக செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்தனர்.