search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதலமைச்சர் முக ஸ்டாலின்
    X
    முதலமைச்சர் முக ஸ்டாலின்

    3 புதிய வேளாண்மை கல்லூரிகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

    கரூர், நாகை, சிவகங்கையில் புதிய வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    2021-22ம் ஆண்டிற்கான வேளாண்மை உழவர் நலத்துறை நிதி நிலை அறிக்கையில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஜீனூரில் 150 ஏக்கரில் தோட்டக்கலை கல்லூரி ஒன்று தொடங்கப்பட்டு, தோட்டக்கலை பயில ஆர்வமுள்ள மாணவர்களின் விருப்பம் நிறைவேற்றப்படும் என்றும், மஞ்சள் தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்காக ஈரோடு மாவட்டம், பவானிசாகரில் மஞ்சள் பயிருக்கான ஆராய்ச்சி மையம் சுமார் 100 ஏக்கர் பரப்பில் அமைக்கப்படும் என்றும், கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில், ஏற்கெனவே இயங்கி வரும் வளங்குன்றா வேளாண்மைக்கான துறை மேம்படுத்தப்பட்டு, ‘நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம்’ என பெயர் மாற்றம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ், கிருஷ்ணகிரி மாவட்டம், ஜீனூரில் புதிய தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஈரோடு மாவட்டம், பவானிசாகரில் புதிய மஞ்சள் ஆராய்ச்சி மையம், கோயம்புத்தூர் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    2021-22ம் ஆண்டிற்கான வேளாண்மை உழவர் நலத்துறை மானியக் கோரிக்கையில், வேளாண் கல்வியின் முக்கியத்துவம் கருதி கரூர், நாகப்பட்டினம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் புதிய அரசு வேளாண்மைக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, கரூர் மாவட்டம் கரூர், நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் மற்றும் சிவகங்கை மாவட்டம் செட்டிநாடு ஆகிய மூன்று இடங்களில் புதிய வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    மேலும், கோயம்புத்தூர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், இளம் அறிவியல் வேளாண்மை மற்றும் இளம் அறிவியல் தோட்டக்கலை ஆகிய பட்டப்படிப்புகளில் இந்த கல்வியாண்டு முதல் தமிழ்வழிக் கல்வி பாடத்திட்டம் மற்றும் திருச்சி மாவட்டம், குமுளூரில் உள்ள வேளாண்மைப் பொறியியல் கல்லூரி வளாகத்தில் வேளாண்மைப் பொறியியல் பட்டயப்படிப்பு ஆகியவை முதல்-அமைச்சரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

    இக்கல்லூரிகளில் இக்கல்வியாண்டில் தலா 50 மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெற்றுள்ளது. இதன்மூலம், அதிகரித்து வரும் வேளாண் கல்வி மற்றும் வேளாண் ஆராய்ச்சிகளின் தேவை பூர்த்தி செய்யப்படுவதோடு, மாணவர்கள் மற்றும் வேளாண் பெருமக்களின் பயன்பாட்டிற்கு மிகவும் பேருதவியாக அமையும்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சு. முத்துசாமி, கே.ஆர். பெரியகருப்பன், வி. செந்தில்பாலாஜி, ஆர். காந்தி, சிவ.வீ. மெய்யநாதன், நாகை மாலி எம்.எல்.ஏ., தலைமைச் செயலாளர் இறையன்பு, வேளாண்மை உழவர் நலத்துறை செயலாளர் சி. சமயமூர்த்தி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


    Next Story
    ×