search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி - அண்ணாமலை
    X
    எடப்பாடி பழனிசாமி - அண்ணாமலை

    தஞ்சை தேர் விபத்தில் 11 பேர் உயிரிழப்பு: எடப்பாடி பழனிசாமி- அண்ணாமலை இரங்கல்

    தஞ்சை தேர் பவனி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தஞ்சாவூர் களிமேடு பகுதியில் உள்ள அப்பர் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக நேற்று இரவு தேர் பவனி நடைபெற்றது. தேர் மீது மின்சாரம் பாய்ந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 11 பேர் பலியாகினர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் தஞ்சாவூர் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி
    இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

    தஞ்சாவூர், களிமேடு அப்பர் கோவில் தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதுடன், சிகிச்சை பெற்று வருவோர் பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப வேண்டுகிறேன்.

    மரணமடைந்தோர்  குடும்பத்துக்கு உரிய இழப்பீடும் , காயமடைந்தோர்க்கு தக்க நிவாரணமும் வழங்கி தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தஞ்சை களிமேடு தேர் பவனி விபத்து செய்தியை கேள்விபட்டு மிகவும் துயரத்தில் உள்ளேன்.  3 சிறுவர்கள் உட்பட மொத்தம் 11 பேர் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர் என்பதை மனம் ஏற்க மறுக்கின்றது.  உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றேன்.

    இனி இது போன்ற தேர் விபத்துக்கள் மூலம் உயிரிழப்புகள் நடைபெறாமல் தடுக்க தமிழக அரசு உயர்மட்ட குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

    தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு வி.கே.சசிகலா இரங்கல் தெரிவித்துள்ளார். திருவிழாக்களின்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய பாதுகாப்பு அளித்திட வேண்டும் என்று கூறி உள்ளார்.


    Next Story
    ×