search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அன்புமணி ராமதாஸ்
    X
    அன்புமணி ராமதாஸ்

    ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில் மாணவர்களுக்கு அரசு கட்டணத்தையே வசூலிக்க வேண்டும்- அன்புமணி

    மாணவர்களின் நலன் கருதி ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவர்களிடமும் ஆண்டு கட்டணமாக ரூ.13,610 மட்டும் தான் வசூலிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என அன்புமணி கூறியுள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆளுகையின் கீழ் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயிலும் மாணவர்கள், தங்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசு மருத்துவக் கல்லூரி கட்டணத்துக்கு இணையாக குறைக்க வேண்டும் என்று பல்வேறு கட்ட போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். மாணவர்களின் உணர்வுகளை புரிந்திருந்தும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வராததும், இந்த வி‌ஷயத்தில் குழப்பம் நீடிக்க அனுமதிப்பதும் நியாயமற்றது ஆகும்.

    ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி கடந்த ஆண்டில் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றப்பட்டு விட்டது. ஆனாலும் கூட, அதே கல்லூரியில் 2020-21-ம் ஆண்டுக்கு முன் சேர்ந்தவர்கள் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களாக கருதப்படுவார்கள்; அதற்கு பிறகு சேர்ந்தவர்கள் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் மாணவர்களாக கருதப்படுவார்கள்.

    அவர்களுக்கான தேர்வுகளை மாணவர் சேர்க்கை ஆண்டுகளின் அடிப்படையில் இரு பல்கலைக்கழகங்களும் தனித்தனியாக நடத்தும்; முன்பே சேர்ந்தவர்கள் உயர்கல்வித்துறையின் கீழும், பின்னர் சேர்ந்தவர்கள் மருத்துவக் கல்வித்துறையின் கீழும் வருவார்கள் என்பதும் குழப்பங்களின் உச்சம் ஆகும். அரசு நினைத்தால் இதை தீர்க்க முடியும்.

    கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றப்பட்ட ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை முழுமையாக எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலை.யின் கீழ் கொண்டு வருவதும், அனைத்து மாணவர்களுக்கும் அரசுக் கட்டணத்தை வசூலிப்பதும் தான் இந்த சிக்கலுக்குத் தீர்வு ஆகும். ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் சேர்ந்த மாணவர்கள் மருத்துவப் படிப்பை முடித்துச் சென்று விட்டார்கள்.

    2020-21-ம் ஆண்டுக்குப் பிறகு சேர்ந்த மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரி கட்டணம் தான் வசூலிக்கப்பட்டு வருகிறது. 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் சேர்ந்தவர்களுக்கு மட்டும் தான் கட்டணக் குறைப்பு செய்ய வேண்டும்; அவர்களுக்கும் கூட அதிகபட்சமாக 3 ஆண்டுகளுக்கு மட்டும் இந்த சலுகையை வழங்க வேண்டியிருக்கும். இதற்காக அரசுக்கு பெரும்தொகை செலவாகாது.

    தமிழ்நாட்டில் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மருத்துவம், பொறியியல் மற்றும் பிற தொழில்படிப்புகளில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களுக்கான கட்டணத்தை தமிழக அரசே செலுத்தி வருகிறது. இது பாராட்டத்தக்க நடவடிக்கை ஆகும். இதற்காக ஆகும் செலவுடன் ஒப்பிடும் போது ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு கட்டணக் குறைப்பு செய்ய ஆகும் செலவு மிகவும் குறைவு தான்.

    அதுவும் கூட இன்னும் மூன்றாண்டுகளுக்குத் தான். எனவே, மாணவர்களின் நலன் கருதி ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவர்களிடமும் ஆண்டு கட்டணமாக ரூ.13,610 மட்டும் தான் வசூலிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×