search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ஆன்லைன் மூலம் ஆர்.டி.ஓ., அலுவலக சேவை - விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுமா?

    ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, எல்.எல்.ஆர்., டிரைவிங் லைசென்ஸ், லைசென்ஸ் புதுப்பித்தல், முகவரி மாற்றம் செய்ய தற்போது வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
    திருப்பூர்:

    தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள ஆன்லைன் மூலம் ஆர்.டி.ஓ., அலுவலக சேவை பெறும் திட்டம் தொடர்பாக, விண்ணப்பதாரருக்கு தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியமாகியுள்ளது.

    www.parivahan.gov.in என்ற இணையதளம், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தால் துவங்கப்பட்டது.

    தமிழகத்தில் இந்த இணையதளம் மூலம், விண்ணப்பதாரர்கள் ஆர்.டி.ஓ., அலுவலகங்களுக்கு நேரில் வராமல், ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, எல்.எல்.ஆர்., டிரைவிங் லைசென்ஸ், லைசென்ஸ் புதுப்பித்தல், முகவரி மாற்றம் செய்ய தற்போது வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

    இதில் மாநிலத்தை தேர்வு செய்தவுடன், உங்கள் கோரிக்கை என்ன என்ற விபரம் கேட்கப்படுகிறது. லைசென்ஸ், புதுப்பித்தல், முகவரி மாற்றம் இவற்றில் ஏதேனும் ஒன்றை ‘கிளிக்‘ செய்தால், ஆதார் விபரம் கேட்கிறது. ஆதார் எண் பதிவு செய்த மறுநொடி செல்போன் எண்ணுக்கு ஓ.டி.பி., அனுப்பி வைக்கப்படுகிறது.

    6 நிமிடங்களில் ஓ.டி.பி., பதிவு செய்தால், விண்ணப்பம் திறக்கும். விண்ணப்பதாரர் சுயவிபரங்களை பதிவு செய்யலாம். 6 பக்கங்களில் விண்ணப்ப பதிவு முடிந்த பின், இறுதி ஓ.டி.பி., எந்த தேதியில் பரிசீலிக்கப்படும் என்ற விபரம் குறுஞ்செய்தியாக விண்ணப்பதாரருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    ஒவ்வொரு நிலையிலும் ஒரிஜினல் ஆவணங்களை ‘அப்லோடு’ செய்ய வேண்டும். ஆவணங்கள் தெளிவில்லாமல் தவறாக இருந்தால், விண்ணப்ப பதிவு துவங்கிய இடத்துக்கு திரும்ப வந்து விடுகிறது. 

    மீண்டும் முயற்சிக்க வேண்டும். இந்த இணையதள வசதி மூலம் பொதுமக்கள் நேரத்தை வீணடித்து, வட்டார போக்குவரத்து துறை அலுவலகத்துக்கு நேரில் வர வேண்டியதில்லை. ஆர்.டி.ஓ.,வை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. கையில் ஆவணங்களை வைத்துக்கொண்டு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வீட்டில் இருந்தே விண்ணப்பிக்கலாம்.

    மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தின் இணையதளங்களில் www.parivahan.gov.in இதுவும் ஒன்று. இதில் ஆங்கிலத்துக்கு மாற்று மொழியாக இந்தி மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் இல்லை. தமிழிலும் தகவல்கள் இருந்தால், விண்ணப்பிப்பவருக்கு எளிதாக இருக்கும். விபரங்களை தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

    இதுகுறித்து திருப்பூர் வட்டார போக்குவரத்துறையினர் கூறுகையில்:

    ‘இணையதளத்தில் இவ்வாறு விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பு தற்போதுதான் துவங்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்பிப்பது எப்படி, எத்தகைய வழிமுறையை பின்பற்ற வேண்டும், தேவையான ஆவணங்கள் என்னென்ன என்பது குறித்து விண்ணப்பதாரர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். விரிவான விபரம் அடங்கிய பிளக்ஸ் மக்கள் கூடும், பொது இடங்களில் வைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்றனர்.
    Next Story
    ×