search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழிசை சவுந்தரராஜன்
    X
    தமிழிசை சவுந்தரராஜன்

    தெலுங்கானா கவர்னர் தமிழிசையை மாற்ற முடிவு?- பா.ஜனதா ஆளும் மாநிலத்தில் நியமிக்க வாய்ப்பு

    தெலுங்கானா மாநில அரசுக்கும், கவர்னருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக சுமூகமான உறவு இல்லை. எனவே அவர் மாற்றப்படலாம் என்று பேச்சு அடிபட்டது. இந்த நிலையில் அவசர அழைப்பின் பேரில் தமிழிசை இன்று திடீரென்று டெல்லி புறப்பட்டு சென்றார்.

    சென்னை:

    தெலுங்கானா மாநில கவர்னராக தமிழ்நாட்டை சேர்ந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கடந்த 1.9.2019 அன்று நியமிக்கப்பட்டார். தெலுங்கானா கவர்னராக பணியாற்றிய அவருக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி 16-ந்தேதி புதுவை துணை நிலை கவர்னர் பொறுப்பும் கூடுதலாக வழங்கப்பட்டது. இரு மாநில கவர்னராகவும் தற்போது பணியாற்றி வருகிறார்.

    தெலுங்கானா மாநில அரசுக்கும், கவர்னருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக சுமூகமான உறவு இல்லை. எனவே அவர் மாற்றப்படலாம் என்று பேச்சு அடிபட்டது. இந்த நிலையில் அவசர அழைப்பின் பேரில் தமிழிசை இன்று திடீரென்று டெல்லி புறப்பட்டு சென்றார்.

    சமீபத்தில் டெல்லி சென்றிருந்த தமிழிசை பிரதமர் மோடியையும், உள்துறை மந்திரி அமித்ஷாவையும் சந்தித்து பேசினார். அப்போது தெலுங்கானா மாநில நிலவரங்கள் பற்றி விளக்கமாக கூறி இருக்கிறார்.

    அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலை சந்திக்க இருக்கும் அந்த மாநிலத்தில் தற்போதைய நிலையில் தமிழிசையை மாற்றிவிட்டு புதிய கவர்னரை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

    சுமூகமாக பணியாற்றும் வகையில் பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் தமிழிசை கவர்னராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. தெலுங்கானா கவர்னராக கேரள ஆளுநர் ஆரிப் அகமதுகான் நியமிக்கப்படுவார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

    எனவே தமிழிசை கேரள மாநில கவர்னர் அல்லது புதுவைக்கு முழுநேர கவர்னராகவோ நியமிக்கப்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் ஆட்சி நடக்கிறது. பா.ஜ.க எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்துள்ள சந்திரசேகரராவ் கவர்னர் தமிழிசைக்கும் உரிய மரியாதை வழங்குவதில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் கடந்த சில மாதங்களாக முதல்- மந்திரிக்கும், கவர்னருக்கும் இடையே கருத்துவேறுபாடும், மோதல் போக்கும் நடந்து வருகிறது. கவர்னர் உரையுடன் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்குவதுதான் வழக்கம். ஆனால் அந்த மரபையே மாற்றி கவர்னர் உரை இல்லாமலேயே சட்டசபை கூட்டம் தொடங்கப்பட்டது.

    இதேபோல் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்ட யாதாத்ரி கோவில் திறப்பு விழாவிலும் கவர்னர் தமிழிசை புறக்கணிக்கப்பட்டார். இதே போல் கவர்னர் மாளிகையில் நடந்த உகாதி தின நிகழ்ச்சியில் முதல் மந்திரி சந்திர சேகரராவ் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். முழுகு மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கவர்னர் தமிழிசை சென்றபோதும் அதிகாரிகள் யாரும் வரவேற்கவில்லை.

    இந்த நிலையில் டெல்லி சென்றிருந்த தமிழிசை பிரதமர் மோடியிடமும், அமித்ஷாவிடமும் இந்த பிரச்சினைகளை எடுத்துச் சொல்லி மாநில அரசின் செயல்பாடுகள் பற்றி தனது அதிருப்தியையும் தெரிவித்ததோடு, மாநிலத்தில் அதிகரித்து வரும் ஊழியர்கள் பற்றியும் பல்வேறு புகார்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இது முதல்-மந்திரி சந்திரசேகரராவை மேலும் கோபம் அடைய வைத்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பத்ராசலம் ரெயில் நிலையத்துக்கு சென்ற கவர்னர் தமிழிசையை அந்த மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு யாரும் வரவேற்க செல்லவில்லை.

    ஒரு மாவட்டத்துக்கு கவர்னர் சென்றால் அந்த மாவட்ட கலெக்டர் வரவேற்க செல்ல வேண்டும் என்பது அரசு மரபு. அந்த மரபும் மீறப்பட்டது.

    ஆனால் இவற்றை கண்டு கொள்ளாமல் பத்ராசலம் ராமர் கோவிலுக்கு சென்று சுவாமிக்கு பட்டு வழங்கி தரிசனம் செய்தார்.

    அப்போது அவரிடம் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு வரவேற்கவராதது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள் அதற்கு அவர் ‘நான் சாமி தரிசனன் செய்யத்தான் வந்தேன். அதிகாரிகளின் வரவேற்புக்காக வரவில்லை. நான் மகிழ்சியாக சாமி தரிசனம் செய்து திரும்புகிறேன்’ என்றார்.

    இப்படி தொடரும் இந்த மோதல் போக்கால் டாக்டர் தமிழிசை சுமூகமாக பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால்தான் அவரை மாற்ற மத்திய அரசு முடிவு செய்து இருப்பதாக அதிகாரிகள் மட்டத்தில் கூறப்படுகிறது.

    இதையும் படியுங்கள்... மரியுபோலின் தலைவிதியை போர் அல்லது ராஜதந்திரம் மூலம் தீர்மானிக்க முடியும்- ஜெலன்ஸ்கி

    Next Story
    ×