
கடந்த 2 ஆண்டுகளாக தொற்று பரவல் காரணமாக பிரம்மோற்சவம் சாதாரணமாக நடைபெற்று முடிந்தது. இதனை தொடர்ந்து தேவநாதசுவாமி கோவிலில் 12 நாட்கள் சித்திரை பிரம்மோற்சவம் கடந்த 7-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
அதன் பின்னர் ஹம்ச வாகனத்தில் சாமி வீதி உலா நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர்.
கடந்த 11-ந் தேதி ஸ்ரீ வேணுகோபாலன் சேவை தங்க விமானத்திலும், சேஷ வாகனத்திலும், தங்கப்பல்லக்கில் நாச்சியார் திருக்கோலத்திலும் சாமி வீதி உலா நடைபெற்றது. 12- ந்தேதி இரவு முக்கிய விழாவாக கருட மஹா உற்சவத்தன்று கருடவாகனத்தில் ஸ்ரீ தேவநாத சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
இரவு வெள்ளி குதிரை வாகனத்தில் தேவநாத சுவாமி வீதிஉலா நடந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் காலை 6.10 மணிக்கு நடந்தது. திருத்தேரில் ஸ்ரீதேவி பூதேவியுடன் தேவநாத சுவாமி அருள்பாலித்தார். அப்போது பக்தர்கள் “கோவிந்தா கோவிந்தா” என்ற பக்தி கோஷத்துடன் பொதுமக்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
தேரோட்ட விழாவில் விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
இரவு பானக பூஜையும், நாளை (17 -ந்தேதி) மட்டையடி மற்றும் தங்க பல்லக்கில் வீதி உற்சவமும், இரவு தெப்ப உற்சவம், 18 -ந்தேதி காலை துவாதச ஆராதனம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.