search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சசிகலா
    X
    சசிகலா

    அ.தி.மு.க.வில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்- சென்னை உரிமையியல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கிய பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து சசிகலா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பொறுப்பை சசிகலா ஏற்றார். கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 29-ந்தேதி இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை செல்ல நேரிட்டது. இதனால் அ.தி.மு.க.வை அவரால் வழிநடத்தி செல்ல இயலவில்லை.

    இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 12-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டது. அப்போது சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும், டி.டி.வி. தினகரனை துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும் நீக்கி தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

    மேலும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான கடிதங்களை தலைமை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்தனர். தேர்தல் ஆணையமும் அவர்களது தேர்வை ஏற்றுக்கொண்டது.

    இதை எதிர்த்து சசிகலா சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் 1.11.2017-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் மதுசூதனன், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு செல்லாது என்றும் அது சட்டத்துக்கு புறம்பானது என்றும் கூறி இருந்தார்.

    பொதுச்செயலாளராகிய நான் தான் பொதுக்குழுவை கூட்ட முடியும். ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் புதிய பதவிகளை உருவாக்கியது சட்ட விரோதமானது. எனவே இவர்கள் கூட்டிய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார்.

    சசிகலா மனுவிற்கு பதில் அளிக்கும் வகையில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, செம்மலை ஆகிய 3 பேரும் பதில் மனுதாக்கல் செய்தனர். அதில் அ.தி.மு.க. இணைந்ததால் தேர்தல் கமி‌ஷனில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது. எங்களது ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. எனவே சசிகலா தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி இருந்தனர்.

    இதற்கு சசிகலா தரப்பில் மீண்டும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் அ.தி.மு.க. அவைத் தலைவராக இருந்த மதுசூதனன் இறந்துவிட்டார். டி.டி.வி. தினகரன் அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து தனிக்கட்சி தொடங்கிவிட்டார் என்று குறிப்பிட்டிருந்தார்.

    இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தீர்ப்பு வழங்க முடிவு செய்து இருந்தது. ஆனால் நீதிபதி வராததால் தீர்ப்பு அளிப்பது தள்ளி வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி ஸ்ரீதேவி இன்று (திங்கட்கிழமை) பிறப்பித்தார். தீர்ப்பில் நீதிபதி கூறி இருப்பதாவது:-

    சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கி அ.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது செல்லும். இந்த வழக்கை நிராகரிக்க கோரி அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் தாக்கல் செய்த மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

    சசிகலா தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.

    இவ்வாறு தீர்ப்பில் கூறி உள்ளார்.

    இதன்மூலம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலா இனி சொந்தம் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க.வின் அறக்கட்டளைகள் சிலவற்றில் சசிகலா பொறுப்பில் இருந்தாலும் கட்சியை கட்டுப்படுத்த முடியாத நிலை உருவாகி இருக்கிறது.

    கோர்ட்டு தீர்ப்பு மூலம் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்கும் சட்ட ரீதியிலான வெற்றி கிடைத்துள்ளது. ஏற்கனவே அவர்கள் இருவரும் தலைமை தேர்தல் ஆணையத்தில் ஆவணங்களை தாக்கல் செய்து தங்களை அ.தி.மு.க. வில் தலைவர்களாக நிலை நிறுத்தியுள்ளனர்.

    அ.தி.மு.க. விதிமுறைகளில் திருத்தம் செய்ததையும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டதையும் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த நிலையில் சென்னை கோர்ட்டும் சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லும் என்று அறிவித்திருப்பது அவருக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.

    இந்த தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமி, ஓபன்னீர்செல்வம் தொடர்ந்து அ.தி.மு.க.வை வழிநடத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. உள்கட்சி தேர்தல் மூலம் அவர்களது அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேலும் வலுப்படும்.

    Next Story
    ×