search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒத்தக்கடை பிரிவு அருகே பூச்சி தாக்குதலுக்கு ஆளான பருத்திச் செடியை படத்தில் காணலாம்
    X
    ஒத்தக்கடை பிரிவு அருகே பூச்சி தாக்குதலுக்கு ஆளான பருத்திச் செடியை படத்தில் காணலாம்

    திண்டுக்கல் அருகே பூச்சி தாக்குதலால் பருத்தி சாகுபடி பாதிப்பு

    திண்டுக்கல் அருகே பூச்சி தாக்குதலால் பருத்தி செடிகள் காய்ந்து வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்
    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே ஜம்புளியம்பட்டி, ஒத்தக்கடை, ராஜக்காபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஒருசில இடங்களில் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதலால் பருத்தி செடிகள் காய்ந்து வருகின்றன.

    இதனால் பருத்தி விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.பொதுவாக பருத்தியில் வாடல் நோய், பூ மற்றும் மொட்டுகள் உதிர்தல், சப்பை கொட்டுதல் மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சியான அசுவினி பூச்சி தாக்குதல்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்றாகும். பருத்தி சாகுபடி நேரத்தில் தொடர்ந்து மழை பெய்வதாலோ அல்லது அதிக அளவு தண்ணீர் பாய்ச்சுவதாலோ செடிகள் நன்றாக வளர்ந்து பசுமையாக காணப்படும்.

    அப்போது சாறு உரியும் பூச்சியான அசுவினி தாக்குதல் அதிக அளவு காணப்படும். குஞ்சுகளும், வளர்ந்த பூச்சியும் இலைகளின் சாறை உறிஞ்சி உண்ணும். இதனால் தாக்கப்பட்ட இலைகள் மஞ்சள் நிறமாக மாறி கீழ்நோக்கி சுருண்டு விடும்.
     
    தாக்கப்பட்ட பயிர்கள் வளர்ச்சி குன்றி காணப்படும்.குஞ்சுகள் இலைகளின் மேற்பரப்பில் தேன் போன்ற கழிவு நீர் திரவத்தை சுரக்க செய்வதால், இலைகள் பூஞ்சானத்தால் கவரப்பட்டு கருமை நிறமாக மாறிவிடும்.

    திண்டுக்கல் சிலுவத்தூர் சாலை ஒத்தக்கடை பிரிவு அருகே சாகுபடி செய்யப்பட்ட பருத்தி பயிர்களில் அதிகளவில் பூச்சி தாக்குதல் ஏற்பட்டுள்ளது. அறுவடை நேரத்தில் ஏற்பட்ட இந்த பூச்சி தாக்குதலால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே இந்த பாதிப்புகளை சரி செய்ய வட்டார வேளாண் அதிகாரிகள் களஆய்வு நடத்தி ஆலோசனை வழங்க வேண்டும். மேலும் பூச்சி தாக்குதலை தடுக்கும் மருந்துகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×