search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வண்ணார்பேட்டை குட்டத்துறை சாஸ்தா கோவிலில் அலங்காரத்தில் சாமி.
    X
    வண்ணார்பேட்டை குட்டத்துறை சாஸ்தா கோவிலில் அலங்காரத்தில் சாமி.

    பங்குனி உத்திர திருவிழாவையொட்டி குல தெய்வ கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

    பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் உள்ள மக்கள் தங்களது குல தெய்வ கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பங்குனி உத்திரம் எனப்படும் சாஸ்தா கோவில் குலதெய்வ வழிபாடு சிறப்பாக கொண்டாடப்படும்.

    இதற்காக வெளியூர்களில் வசிக்கும் ஏராளமானோர் குடும்பத்துடன் இன்று குலதெய்வ கோவிலுக்கு வந்து சிறப்பு வழிபாடு செய்தனர்.

    சில கோவில்களில் கிடா வெட்டுதல், படையல் நடைபெற்றது. முக்கிய சாஸ்தா கோவில்களில் அன்னதானம், தொடர் கச்சேரிகள் உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.

    நெல்லை மாவட்டத்தில் பாபநாசம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதுபோல வள்ளியூர் அருகே உள்ள சித்தூர் சாஸ்தா கோவில், தென்கரை மகாராஜா சாஸ்தா கோவில்,

    வீரவநல்லூர் அருகே உள்ள பொட்டல் பாடலிங்க சாஸ்தா கோவில், மருகால்தலை பூலுடையார் சாஸ்தா கோவில், பிராஞ்சேரி கரையடி மாடசாமி கோவில் ஆகிய கோவில்களில் ஏராளமான பக்தர்கள் வெளியூர்களில் இருந்து வந்ததால் கூட்டம் கட்டுக்கடங்காமல் காணப்பட்டது.

    பங்குனி உத்திரத்தையொட்டி நெல்லை புதிய பஸ் நிலையத்தில் அலைமோதிய கூட்டம்.

    இதையொட்டி கோவில் நிர்வாகம் சார்பாக அனைத்து பக்தர்களும் சாமி தரிசனம் செய்யும் வகையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

    மேலும் தாழையூத்து, சீவலப்பேரி சாஸ்தா கோவில்கள், சேரன்மாதேவி செங்காடு சாஸ்தா கோவில், நாங்குநேரி செம்பு குட்டி சாஸ்தா கோவில், ஆழ்வார்குறிச்சி காக்கும் பெருமாள் கோவில், அம்பை மன்னார் கோவில் மெய்யப்ப சாஸ்தா கோவில்,

    அருணாபேரி மரத்தடி மேகம் திரை கொண்ட சாஸ்தா கோவில் உள்பட பல்வேறு கோவில்களிலும் இன்று சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது.

    காலையில் கணபதி ஹோமம் தொடர்ந்து சாஸ்தா மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும் நடந்தது.

    தூத்துக்குடி மாவட்டம் மேலபுதுக்குடி அய்யனார் கோவிலிலும் இன்று ஏராளமான கூட்டம் அலைமோதியது. அங்கும் வெளியூரிலிருந்து வந்த பக்தர்கள் திரளாக வழிபட்டனர்.

    பிராஞ்சேரி கரையடி மாடசாமி கோவிலில்  திரண்டிருந்த கூட்டத்தை படத்தில் காணலாம்.
    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள முக்கிய சாஸ்தா கோவில்களிலும் இன்று வெளியூர் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் அனைத்து பள்ளி- கல்லூரிகளும் இன்று செயல்படவில்லை.

    வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் தங்கள் குலதெய்வ கோவிலான சாஸ்தா கோவிலுக்கு செல்லும் வகையில் சிறப்பு பஸ்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


    நெல்லை பஸ் நிலையத்தில் இருந்து எந்தெந்த ஊர்களுக்கு, அதிகமாக பக்தர்கள் செல்கிறார்களோ, அந்த ஊர்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டது.

    இது தவிர இன்று ஏராளமான வெளியூர் பக்தர்கள் நெல்லை வந்து, கார் மற்றும் வேன்களிலும் தங்கள் குலதெய்வ கோவிலுக்கு புறப்பட்டுச் சென்றனர். இதனால் இன்று கார் வேன்கள் டுதலாக இயக்கப்பட்டது.

    பங்குனி உத்திரத்தை முன்னிட்டு முக்கிய கோவில்களில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நெல்லை மாநகர பகுதியில் மட்டும் 38 சாஸ்தா கோவிலுக்கும், நெல்லை மாவட்ட பகுதியில் 120 கோவில்களுக்கும் சிறப்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இதேபோல் தென்காசி மாவட்டத்திலும் நூற்றுக்கும் மேற்பட்ட கோவில்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தூத்துக்குடி மாவட்டத்திலும் நூற்றுக்கும் மேற்பட்ட கோவில்களில் இன்று கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×