search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அண்ணா அறிவாலயம்
    X
    அண்ணா அறிவாலயம்

    அண்ணா அறிவாலயத்தில் மார்ச் 8-ந்தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் மகளிர் தினவிழா கொண்டாட்டம்

    பெண் உரிமை போற்றி பெண்களுக்கு பெருமை சேர்க்கும் இவ்விழாவில் தி.மு.க. மகளிர் மட்டுமின்றி அனைத்து மகளிரும் திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    சென்னை:

    தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ‘மனிதன் பெண்ணை தனக்குரிய ஒரு சொத்தாக கருதுகிறானேயொழிய தன்னை போன்ற உணர்ச்சிக்கு அருகதையுள்ள ஓர் உயிராக மதிப்பதில்லை’ என்றார் பெரியார்.

    தந்தை பெரியாரின் மனக் குறையை போக்கும் வகையில் தான் கலைஞர் கருணாநிதி பல்வேறு திட்டங்களை பெண்களின் மேன்மைக்காக உருவாக்கி சட்டங்களை இயற்றினார். பெண்களுக்கு சொத்தில் சம பங்கு என்பது அதில் முதன்மையானது ஆகும்.

    கலைஞரின் அடியொற்றி உழைப்பால் உயர்ந்து இன்று மக்களின் மனம் கவர்ந்த முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் மு.க.ஸ்டாலின் பெண்களுக்கு பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். அதில் உச்சகட்டமாக உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு என்பதை சட்டமாக்கி 11 பெண்களை மேயர்களாக்கி, பல பெண்களை நகராட்சி தலைவர்களாக அமர வைத்து சாதனை புரிந்திருக்கிறார்.

    எனவே மார்ச் 8-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடக்கும் மகளிர் தின விழாவிற்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்பது மிக பொருத்தமானதாகவும், மகிழ்ச்சி அளிப்பதாகவும் உள்ளது. அதேபோன்று கேரள அரசின் முன்னாள் சுகாதார அமைச்சர் கே.கே. ஷைலஜா சிறப்புரை நிகழ்த்துகிறார்.

    நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் குழந்தைகள், பெண்கள் பாதுகாப்புக்காகவும், மேன்மைக்காகவும் தொண்டாற்றி வரும் எத்திராஜ் கல்லூரி தலைவர் சந்திரா தேவி தணிகாசலம், தாசீம்பீவி கல்லூரி முதல்வர் சுமையாதாவூத்தும் வாழ்த்துரை வழங்குகிறார்கள். அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலை வகிக்கிறார். மகளிர் ஆணைய தலைவர் குமரி விஜயகுமார் பங்கேற்கிறார்.

    பெண் உரிமை போற்றி பெண்களுக்கு பெருமை சேர்க்கும் இவ்விழாவில் தி.மு.க. மகளிர் மட்டுமின்றி அனைத்து மகளிரும் திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இதையும் படியுங்கள்... ஆணவ கொலைகளைத் தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்- திருமாவளவன்

    Next Story
    ×