search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை உயர்நீதிமன்றம்
    X
    சென்னை உயர்நீதிமன்றம்

    அரசு பணி நியமனங்களில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

    மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தர விட்டுள்ளது.
    சென்னை:

    தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் கடந்த 2018, 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் இரண்டாம் நிலை காவலர்கள், இரண்டாம் நிலை சிறை வார்டன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஆகிய பதவிகளுக்கான தேர்வு அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

    இப்பணியிடங்களுக்கு மூன்றாம் பாலினத்தவர்கள் விண்ணப்பிக்கும்போது ஆண்கள் என அடையாளப்படுத்தினால்ஆண்களுக்கான தேர்வு நடை முறைகளும், பெண்கள் என்று அடையாளப்படுத்தினால், பெண்களுக்கான நடைமுறைகளும் பின்பற்றப்படும் என அறிவிக்கப் பட்டிருந்தது.

    இந்த அறிவிப்பை எதிர்த்தும் மூன்றாம் பாலினத்தவர்களான தேனியைச் சேர்ந்த ஆராதனா, சாரதா உள்பட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வயது வரம்பு, எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வுகளிலும், கட்-ஆப் மதிப்பெண்களிலும் சலுகைகள் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் அவர்கள் கோரியிருந்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

    அரசு பணியிடங்களை நிரப்பும்போது மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் இதுவரை தனி இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. 

    பெண்கள் என அடையாளப்படுத்தப்படும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பெண்களுக்கான 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.அதேநேரம் ஆண்கள் என அடையாளப்படுத்தப்படும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எந்தவொரு இடஒதுக்கீடோ அல்லது சலுகையோ வழங்கப்படுவதில்லை. 

    மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனியாக குறி்ப்பிட்ட சதவீதம் வரை இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசுக்கு எந்தவொரு தடையும் இல்லை.

    எனவே, 2018, 2019 மற்றும் 2020-ஆண்டுகளில் மனுதாரர்களை தகுதி நீக்கம் செய்து தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறேன்.

    மனுதாரர்கள் அனைவரும் இரண்டாம் நிலை காவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான ஆரம்ப கட்ட தேர்வு நடவடிக்கைகளில் தகுதி பெற்றதாக கருதி, உடற்தகுதி, தேர்வு உள்ளிட்ட பிற தேர்வுகளில் அவர்களுக்கு பெண்களுக்கான சலுகைகளை வழங்கி, 8 வாரங்களில் தேர்வு நடை முறைகளை சீருடை பணியாளர்கள் தேர்வாணையத்தின் உறுப்பினர் செயலர் முடிக்க வேண்டும்.

    எதிர்காலத்தில், அரசு பணி நியமனங்களில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சலுகைகள் மட்டுமின்றி குறிப்பிட்ட சதவீதம் வரை தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.



    Next Story
    ×