search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சரண்
    X
    சரண்

    வெடிவிபத்தில் தேடப்பட்ட வீட்டு உரிமையாளர் சரண்

    உசிலம்பட்டி வெடிவிபத்தில் வாலிபர் பலியான சம்பவத்தில் தேடப்பட்ட வீட்டு உரிமையாளர் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.
    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள நல்லிவீரன்பட்டியை  சேர்ந்தவர் பிரவீன்(வயது35). இவர் அனுமதியின்றி வீட்டின் மேல் மாடியில் ஆட்களை வைத்து பட்டாசுகளை தயாரித்து வந்துள்ளார்.

    நேற்று காலை பட்டாசு தயாரிக்கும்போது பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் வேலை பார்த்துக்கொண்டிருந்த செக்கானூரணியை சேர்ந்த மாற்றுத்திறனாளி அஜித் (27) சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக இறந்தார். 

    மேலும் வெடிவிபத்து நடந்த கட்டிடமும் முழுவதுமாக இடிந்து விழுந்தன. இந்த வெடிவிபத்தில் கீழ் வீட்டில் குடியிருந்த விபிதா(22), அவரது 6 மாத குழந்தை ஹர்சிதா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இடிபாடுகளில் சிக்கியிருந்த தாய் மற்றும் குழந்தையை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக உசிலம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். வெடிவிபத்து நடந்ததும் வீட்டு உரிமையாளர் பிரவீன் தலைமறைவானார். அவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது.

    போலீசார் தீவிரமாக தேடிவந்த நிலையில் இன்று பிற்பகல் பிரவீன் உசிலம்பட்டி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×