
சங்கரன்கோவில் பாரதியார் நகர் 8-ம் தெரு பகுதியை சேர்ந்தவர் முனியசங்கர். லாரி டிரைவர். இவரது மனைவி துர்காதேவி (வயது27). இவர்களுக்கு 1½ வயதில் அமுதன் என்ற ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் நேற்று வழக்கம் போல் அமுதன் வீட்டு வாசலில் விளையாடி கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரம் கழித்து துர்காதேவி வெளியே வந்து பார்த்த போது மகன் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அக்கம் பக்கத்தில் தேடிய போது எதிர் வீட்டில் வசிக்கும் கண்ணன் என்பவரது வீட்டில் உள்ள கழிவு நீர் தொட்டியில் சிறுவன் விழுந்து இருந்ததாக கூறப்படுகிறது. சிறுவனை மீட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.