search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீரர்களின் பிடியில் சிக்காமல் சீறிப்பாய்ந்த காளை.
    X
    வீரர்களின் பிடியில் சிக்காமல் சீறிப்பாய்ந்த காளை.

    குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு- அடக்க பாய்ந்த வீரர்களை பந்தாடிய காளைகள்

    ஆன்லைனில் பதிவு செய்த சான்று, தடுப்பூசி சான்று, கொரோனா தொற்று இல்லை சான்றிதழ் கொண்டு வந்த வீரர்கள் 320 பேர் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு விழாக்குழு சார்பில் போட்டிக்கான சீருடை வழங்கப்பட்டது.
    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது.

    போட்டியில் பங்கேற்பதற்காக நாமக்கல், குமாரபாளையம், எருமப்பட்டி, பொட்டிரெட்டிப்பட்டி, சேந்தமங்கலம், பள்ளிப்பாளையம், திருச்செங்கோடு, பரமத்திவேலூர், ராசிபுரம், மோகனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், திருச்சி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் காளைகளை உரிமையாளர்கள் அழைத்து வந்திருந்தனர்.

    தமிழக அரசு வெளியிட்டுள்ள விதிமுறைகளின்படி 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று, கொரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்று வைத்திருந்த உரிமையாளர்கள் மற்றும் உதவியாளர்கள், பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். உரிய சான்றிதழ்கள் இல்லாதவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

    காளைகளை ஆய்வு செய்ய கால்நடை பராமரிப்பு துறையினருக்கு தனியாக பந்தல் அமைத்து கொடுக்கப்பட்டிருந்தது. அங்கு வைத்து ஆய்வு செய்து தகுதியான காளைகளை போட்டியில் பங்கேற்க டாக்டர்கள் அனுமதித்தனர். சுமார் 500 காளைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    இதேபோல் ஆன்லைனில் பதிவு செய்த சான்று, தடுப்பூசி சான்று, கொரோனா தொற்று இல்லை சான்றிதழ் கொண்டு வந்த வீரர்கள் 320 பேர் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு விழாக்குழு சார்பில் போட்டிக்கான சீருடை வழங்கப்பட்டது.

    இதையடுத்து போட்டியை சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார். முன்னதாக அமைச்சர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் ‘‘காளைகளை துன்புறுத்த மாட்டோம், அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு, அமைதியான முறையில் நடந்து கொள்வோம், கொரோனா தொற்று தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வழங்கிய தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவோம்’’ என வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    இதையடுத்து முதலில் கோவில்மாடு வாடிவாசல் வழியாக விடப்பட்டது. அதனை வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. இதனை தொடர்ந்து வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளைகளாக அவிழ்த்து விடப்பட்டன.

    காளைகள் வீரர்களை முட்டி தூக்கி வீசியது. இருப்பினும் வீரர்கள் பாய்ந்து சென்று திமிலை பிடித்து அடக்கினார்கள். பல காளைகள் வீரர்களின் பிடியில் சிக்காமல் துள்ளி குதித்து ஓடியது. ஒரு சில வீரர்கள் காளைகளின் கம்பீரத்தை பார்த்து அவற்றை அடக்க அஞ்சினர். தொட்டு பார் உன்னை விடமாட்டேன் என காளைகள் வேகமாக ஓடியது. இதை கண்டு வீரர்கள் அடக்க அஞ்சி தடுப்பு கம்பிகள் மீது ஏறி நின்றனர். பல காளைகள் களத்தை தெறிக்க விட்டன. வீரர்களை காளைகள் பந்தாடும் காட்சி மெய்சிலிர்க்க வைப்பதாக இருந்தது.

    பொதுமக்கள் கைகளை தட்டியும், சத்தம் எழுப்பியும் வீரர்களை உற்சாகப்படுத்தினார்கள். அதுபோல் காளைகளுக்கும் விசில் அடித்து கரகோ‌‌ஷம் எழுப்பி வரவேற்றனர். மைதானத்திற்குள் பொதுமக்கள் நுழையாமல் தடுக்கும் வகையில் இரும்பு தடுப்பு பெரிய அளவில் அமைக்கப்பட்டிருந்தது.

    காளைகள், வீரர்களுக்கு காயங்கள் ஏற்படாமல் இருக்க வேண்டி மைதானத்தில் பாதுகாப்புக்காக தேங்காய்நார் பரப்பப்பட்டு இருந்தது. காளைகள் வெளியேறும் இடத்தில் மைதானத்தில் சுற்றிலும் 2 அடுக்கு தடுப்பு அமைக்கப்பட்டு, காளைகளை உரிமையாளர்கள் எளிதில் பிடிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

    காளைகளை அடக்கிய வீரர்களுக்கு உடனுக்குடன் தங்ககாசு, மோட்டார் சைக்கிள், மின்விசிறி, கட்டில், மிக்சி, வேட்டி சட்டை, வெள்ளி, சில்வர் பாத்திரங்கள், வெள்ளிக்காசு மற்றும் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது. இதேபோல் வீரர்களால் அடக்க முடியாத காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. அவற்றை உரிமையாளர்கள் வாங்கிச் சென்றனர்.

    ஜல்லிக்கட்டில் காயம் அடைந்த நபர்களுக்கு சிகிச்சை அளிக்க அங்கேயே மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். ஆம்புலன்ஸ் மற்றும், தீயணைப்பு வாகனமும் அங்கு தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தது. குடிநீர் வசதிகளும் செய்யப்பட்டு இருந்தது. அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க நூற்றுக்கணக்கான போலீசார் மைதானத்தை சுற்றிலும் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
    Next Story
    ×