என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைது
வேலை வாங்கி தருவதாக கூறி போலி பணி நியமன ஆணை வழங்கிய டியூசன் ஆசிரியர் கைது
கல்வித்துறை அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி போலி பணி நியமன ஆணை வழங்கிய டியூசன் ஆசிரியரை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை:
அரசு தேர்வுகள் துறை சங்கம் ஒன்றில் நிர்வாகியாக இருக்கும் சங்கர், தாம்பரத்தை சேர்ந்த பாலசுப்புலட்சுமி ஆகியோருக்கு பள்ளி கல்வித்துறை இயக்குநரக வளாகத்தில் அலுவலக உதவியாளர் வேலை வாங்கி தருவதாக ராயப்பேட்டையைச் சேர்ந்த டியூசன் ஆசிரியர் ராஜேந்திரன் கூறியுள்ளார்.
இதற்காக ரூ.2 லட்சம் பேரம் பேசி, முன்பணமாக ரூ.30 ஆயிரத்தை வாங்கி உள்ளார். கடந்த 6 மாதத்துக்கு முன்பு இருவரும் அந்த பணத்தை ராஜேந்திரனிடம் கொடுத்துள்ளனர்.
இதற்கு ராஜேந்திரன் போலியான பணி நியமன ஆணை கொடுத்ததுடன் பாலசுப்புலட்சுமியின் அசல் சான்றிதழையும் வாங்கி வைத்திருந்தார்.
இந்த பணி நியமன ஆணை போலியானது என தெரிந்தவுடன் பால சுப்புலட்சுமியின் அண்ணன் வெங்கடேசன் என்பவர் டியூசன் ஆசிரியர் ராஜேந்திரனை போனில் அழைத்து பேசியுள்ளார்.
அப்போது ராஜேந்திரன், நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்துக்கு வருமாறும் அங்கு ரூ.30 ஆயிரம் பணத்தை கொடுத்து விடுகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ராஜேந்திரன் டி.பி.ஐ. வளாகத்துக்கு வந்தார். அதற்குள் போலீசுக்கு தகவல் தெரிவித்து இருந்தனர். நுங்கம்பாக்கம் போலீசார் டியூசன் ஆசிரியர் ராஜேந்திரனை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த புகாரில் சிக்கிய அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ராஜேந்திரன் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்க உள்ளனர்.
Next Story