search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்கள் குளியல் அறையில் பொருத்தப்பட்டு இருந்த கேமிரா
    X
    பெண்கள் குளியல் அறையில் பொருத்தப்பட்டு இருந்த கேமிரா

    கோவில் குளியல் அறையில் 3 ரகசிய கேமிராக்கள் கண்டெடுப்பு- போலீசார் தீவிர விசாரணை

    விளாத்திகுளம் அருகே கோவில் குளியலறையில் ரகசியக் கேமிரா இருப்பதைக்கண்ட பெண் அதிர்ச்சியடைந்து கோவில் நிர்வாகத்தினரிடம் இதுகுறித்து கேட்டுள்ளார்.
    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சித்தவநாயக்கன்பட்டியில் காமாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது.

    சுமார் 35 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி சிறப்பு பூஜைகளும், ஆண்டுக்கு ஒரு முறை மாசிக்கொடை திருவிழாவும் விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த சிறப்பு பூஜைகளில் கலந்து கொள்வதற்கும், சுவாமி தரிசனம் செய்வதற்கும் ஏராளமான பொதுமக்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகின்றனர். அவ்வாறு வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் இக்கோவிலில் தங்குவதற்கு, குளிப்பதற்கு என கோவில் நிர்வாகம் சார்பில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்நிலையில் கடந்த 17-ந் தேதி பவுர்ணமி தினத்தன்று கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து தரிசனம் செய்து கொள்வதற்காக ஏராளமானோர் இக்கோவிலுக்கு வந்திருந்தனர்.

    அப்போது இக்கோவிலுக்கு வந்த விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் பக்தர் ஒருவர் குளிப்பதற்காக இக்கோவில் வளாகத்தில் உள்ள குளியலறைக்கு சென்றுள்ளார். அப்போது குளியலறையில் சம்பந்தமில்லாத கருப்புநிற வயர் இருப்பதைக்கண்டு, பார்த்தபோது அது கேமிரா என தெரியவந்துள்ளது.

    இதனையடுத்து குளியலறையில் ரகசியக் கேமிரா இருப்பதைக்கண்ட அப்பெண் அதிர்ச்சியடைந்து கோவில் நிர்வாகத்தினரிடம் இதுகுறித்து கேட்டுள்ளார்.

    கோவிலின் குளியலறையில் இருந்த ரகசிய கேமிரா கண்டெடுப்பு குறித்து தகவல் கிடைத்த விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார், கோவிலுக்கு சென்று சோதனை செய்ததில் கூடுதலாக 2 ரகசிய கேமிராக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டெடுக்கப்பட்டது. மேலும் கேமராவுடன் சார்ஜர் இருந்தது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து கோவில் நிர்வாகத்திடம் விசாரணை செய்ததில் இது பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது எனவும், இந்த வி‌ஷயம் வெளியில் தெரிந்தால் கோவிலின் பெயர் கெட்டுவிடும் எனவும் காவல்துறையினரிடம் கூறிஉள்ளனர்.

    இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

    இப்பிரச்சனை குறித்து கோவில் நிர்வாகியிடம் கேட்டபோது, கோவில் நிர்வாகத்தில் சில பிரச்சினை இருப்பதாகவும், தங்களுக்கு பிடிக்காத சிலர் வேண்டுமென்றே கேமிரா வைத்து இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்றும், காவல் நிலையத்தில் புகார் அளிப்பது குறித்து நிர்வாகிகளிடம் பேசி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×