search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொலை
    X
    கொலை

    மதுரை அருகே குடிபோதை தகராறில் வாலிபர் குத்திக்கொலை

    மதுரை அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் அக்கா கணவரே வாலிபரை கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    நெல்லை மாவட்டம் சுத்தமல்லி ஜீவா நகரைச் சேர்ந்த மாரிமுத்து மகன் முனீஸ்வரன் (வயது 22). இவருக்கு அக்காள் முனீஸ்வரி உள்ளார்.

    மதுரை அருகே உள்ள ஆண்டார் கொட்டாரத்தை அடுத்த கொண்டபெத்தானைச் சேர்ந்த மதுரைவீரன் (43) என்பவருடன் முனீஸ்வரிக்கு திருமணமாகி, தனிக்குடித்தனம் நடத்தி வருகின்றனர்.

    முனீஸ்வரன் நேற்று மதுரை வந்தார். அவரும் மைத்துனர் மதுரை வீரனும் நேற்று இரவு சிலைமான் பகுதியில் மது குடித்தனர்.

    மதுபோதையில் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த மதுரைவீரன், முனீஸ்வரனை சரமாரியாக கத்தியால் குத்தினார். ரத்த காயங்களுடன் மயங்கி கிடந்தவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த நிலையில் ஆண்டார் கொட்டாரத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற தம்பி, கணவர் இருவரும் வீடு திரும்பாததால் முனீஸ்வரி அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தார். அப்போது சிலைமான் பகுதியில் முனீஸ்வரன் கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடப்பதாக தகவல் வந்தது.

    முனீஸ்வரி அலறி அடித்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தார். அங்கு முனீஸ்வரன் கத்தி குத்து காயங்களுடன் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக சிலைமான் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முனீஸ்வரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×