search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொலை செய்யப்பட்ட தனலட்சுமி மற்றும் கைதான குமார்.
    X
    கொலை செய்யப்பட்ட தனலட்சுமி மற்றும் கைதான குமார்.

    கள்ளக்காதலனுடன் வீடியோ காலில் பேசியதால் மனைவியை கொன்றேன் - கைதான கணவர் பரபரப்பு வாக்குமூலம்

    கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனலட்சுமி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருப்பூர் ஜே.ஜே.நகரில் உள்ள அவரது சகோதரி வீட்டிற்கு வந்தார்.
    திருப்பூர்:

    தென்காசி மாவட்டம், காசிதர்மம் பகுதியை சேர்ந்தவர் குமார்(வயது 32). லாரி டிரைவர். இவரது மனைவி தனலட்சுமி(25). இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.

    இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனலட்சுமி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருப்பூர் ஜே.ஜே.நகரில் உள்ள அவரது சகோதரி வீட்டிற்கு வந்தார். 

    இதையறிந்த குமாரும் திருப்பூர் வந்து மனைவியுடன் தனியாக வாடகை வீடு எடுத்து வசித்து வந்துள்ளார். பனியன் நிறுவனத்தில் டிரைவராகவும் பணியாற்றி வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று அதிகாலை அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த குமார், அரிவாளால் தனலட்சுமியை சரமாரி வெட்டிக்கொன்றார். 

    இதையடுத்து 15 வேலம்பாளையம் போலீசார் குமாரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது தனலட்சுமியை கொலை செய்ததற்கான காரணம் குறித்து குமார் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். 

    அவர் வாக்குமூலத்தில் கூறியதாவது:

    நானும் தனலட்சுமியும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம். திருமணமானதில் இருந்து சந்தோஷமாக வாழ்ந்து வந்தோம். 2 குழந்தையும் உள்ளது. நான் லாரி டிரைவராக வேலை பார்ப்பதால் அடிக்கடி வெளியூர்களுக்கு சென்று விடுவேன். வீட்டிற்கு திரும்பி வர ஒரு வாரம் முதல் 2 வாரம் வரை ஆகும். 

    இந்தநிலையில் தனலட்சுமிக்கும், காசிதர்மம் பகுதியை சேர்ந்த  வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனிலும் பேசி வந்துள்ளனர். இந்த தகவல் எனக்கு அரசல் புரசலாக தெரியவந்தது.

    இதையடுத்து நான் மனைவியை கண்டித்தேன். அதற்கு அவர் நாங்கள் நட்பாகத்தான் பழகுகிறோம். எங்களுக்குள் வேறு எந்த தொடர்பும் இல்லை என்றார். ஒரு நாள் பேஸ்புக்கில் அந்த வாலிபரும், எனது மனைவியும் ஒன்றாக சேர்ந்து இருக்கும் புகைப்படம் வெளியானது.

    இதை பார்த்து அதிர்ச்சியடைந்த நான் இது பற்றி மனைவியிடம் கேட்டேன். இதனால் எங்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் பிரியும் நிலைக்கு சென்று விட்டோம். ஊர் பெரியவர்கள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி எங்களை சேர்த்து வைத்தனர்.  

    அதன் பிறகு நான் வேலை தொடர்பாக வெளியூர் சென்றுவிட்டேன். திரும்பி வந்து பார்த்தபோது மனைவியை காணவில்லை. அவரை பற்றி விசாரித்த போது திருப்பூரில் உள்ளஅவரது சகோதரி வீட்டில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நான் திருப்பூர் வந்து மனைவியை ஊருக்கு அழைத்தேன். 

    ஆனால் அவர் வர மறுத்துவிட்டார். இதனால் திருப்பூரிலேயே வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து குடியிருந்து வந்தோம். நான் பனியன் நிறுவனத்தில் டிரைவராக வேலைக்கு சேர்ந்தேன். நான் பணிக்கு சென்றதும் தனலட்சுமி, கள்ளக்காதலனுடன் வீடியோ காலில் பேசி வந்துள்ளார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. 

    2 குழந்தைகளின் எதிர்காலம் கருதி கள்ளக்காதலை கைவிடுமாறு வற்புறுத்தினேன். ஆனால் அவர் நான் அப்படித்தான் இருப்பேன் என்று என்னை கேவலமாக திட்டினார்.

    இது எனக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நேற்று அதிகாலை எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. பல முறை சொல்லியும் கேட்காததால் அரிவாளை எடுத்து தனலட்சுமியை சரமாரி வெட்டினேன். ஆத்திரம் தீரும் வரை வெட்டிக் கொலை செய்தேன் என்றார்.
    Next Story
    ×