search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில் பனியன் நிறுவனங்கள் இயங்க தொடங்கியதை படத்தில் காணலாம்.
    X
    திருப்பூரில் பனியன் நிறுவனங்கள் இயங்க தொடங்கியதை படத்தில் காணலாம்.

    திருப்பூரில் பனியன் நிறுவனங்கள் மீண்டும் முழுவீச்சில் இயக்கம்

    பொங்கல் பண்டிகையையொட்டி பனியன் நிறுவனங்களுக்கு கடந்த 13-ந்தேதி முதல்16-ந்தேதி வரை விடுமுறை விடப்பட்டது.
    திருப்பூர்:

    திருப்பூரில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் உள்ளன. இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 5 லட்சம் தொழிலாளர்கள் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த 3 லட்சம் தொழிலாளர்கள் என 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

    தீபாவளி, பொங்கல் பண்டிகையையொட்டி திருப்பூர் பனியன் நிறுவன ங்களுக்கு தொடர்ச்சியாக விடுமுறை விடப்படுவது வழக்கம். இந்தநிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி பனியன் நிறுவனங்களுக்கு கடந்த 13-ந்தேதி முதல்16-ந்தேதி வரை விடுமுறை விடப்பட்டது. 

    மேலும் 17,18-ந்தேதி நூல் விலை உயர்வை கண்டித்து பனியன் நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தொழிலாளர்களுக்கு தொடர்ச்சியாக 6 நாட்கள் விடுமுறை கிடைத்தது. 

    இதையடுத்து கடந்த 13-ந்தேதி முதல் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். வெளிமாநில தொழிலாளர்கள் பலரும் தங்களது சொந்த மாநிலங்களுக்கு சென்றனர். 

    தொழிலாளர்கள் ஏராளமானோர் வெளியூர் சென்றதால் திருப்பூர் மாநகர சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. 2 நாட்கள் உற்பத்தி நிறுத்த போராட்டத்திற்கு பிறகு இன்று முதல் பனியன் நிறுவனங்கள் உற்பத்தியை தொடங்கி உள்ளன. 

    இதையடுத்து நேற்று முதலே தொழிலாளர்கள் பலர் திருப்பூருக்கு வர தொடங்கினர். இன்று காலை ஏராளமான தொழிலாளர்கள் வந்தனர். இதனால் திருப்பூர் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், கோவில்வழி பஸ் நிலையம் உள்ளிட்ட பஸ் நிலையங்களில் தொழி லாளர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    சொந்த ஊர் சென்ற தொழிலாளர்கள் திருப்பூர் திரும்புவதற்காக நெல்லை, கன்னியாகுமரி, மதுரை, தஞ்சை, புதுக்கோட்டை, சேலம், தேனி உள்பட பல்வேறு இடங்களில் இருந்து திருப்பூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.  

    150 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டதாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். தொழிலாளர்கள் திரும்பியதையடுத்து பனியன் நிறுவனங்கள் முழுவீச்சில் இயங்க தொடங்கின. 

    சொந்த ஊர்களுக்கு சென்ற வடமாநில தொழிலாளர்களும் தொடர்ந்து திருப்பூருக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர். இதையடுத்து வெளிநாடுகளுக்கான ஆர்டர்களை முடிக்கும் வகையில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
    Next Story
    ×