search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மானியத்தொகை விடுவிக்காததால் மின் இணைப்பு கிடைக்காமல் தவிக்கும் விவசாயிகள்

    டாப்செட்கோ திட்டத்தின் கீழ் கடன் மற்றும் விவசாய மின் இணைப்பு வழங்க, திருப்பூர் மாவட்டத்திற்கு மறு மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.
    உடுமலை:

    திருப்பூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சிறு, குறு விவசாயிகளுக்கு, போர்வெல் அமைத்து இலவச விவசாய மின் இணைப்பு கொடுக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு மாவட்ட அலுவலர்களாக ஆய்வு செய்யப்படுகிறது. தேர்வு செய்யப்படும் விவசாயிகளுக்கு கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் வழங்க பரிந்துரை செய்யப்படுகிறது.

    நிலம் அடமானம் அடிப்படையில் கடன் பெற்று போர்வெல் அமைக்கும் விவசாயிகளுக்கு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் இலவச மின்சாரம் வழங்கும் வகையில் ரூ.50 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது.

    இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து போர்வெல் அமைத்த விவசாயிகளுக்குரிய மானியத்தொகை விடுவிக்காததால் பல ஆண்டுகளாகியும் மின் இணைப்பு கிடைக்காமல் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

    பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சிறு, குறு விவசாயிகள் பாசனத்திட்டம் அமைக்க ‘டாப்செட்கோ’ திட்டத்தின் கீழ் நான்கு ஆண்டுக்கு முன் தேர்வு செய்து கூட்டுறவு கடன் சங்கம் வாயிலாக போர்வெல் அமைக்க கடன் பெற்றோம்.

    அதற்கு பின் மின் இணைப்பு வழங்க மானியத்தொகையை அத்துறை மின் வாரியத்திற்கு வழங்காததால் மின் இணைப்பு பெற முடியாமல் அவதிப்படுகிறோம்.

    தற்போது இலவசம் மற்றும் தட்கல் விவசாய மின் இணைப்பு திட்டத்தின் கீழ் மின் இணைப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில் அரசு மானியத் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டதால் மின் இணைப்பு பெற முடியாத சிக்கல் ஏற்படுகிறது.

    மின் வாரிய அதிகாரிகள் தரப்பில், டாப்செட்கோ திட்டத்தின் கீழ்  கடன் மற்றும் விவசாய மின் இணைப்பு வழங்க, திருப்பூர் மாவட்டத்திற்கு மறு மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. எனவே மின் இணைப்பு வழங்க முடியாது என தெரிவிக்கின்றனர்.

    எனவே மாவட்ட நிர்வாகம், ‘டாப்செட்கோ’ திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×