search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILE PHOTO
    X
    FILE PHOTO

    சாலையோரவாசிகளுக்கு கொரோனா தடுப்பூசி

    திருச்சியில் சாலையோரம் வசித்து ஆதரவற்றோர்களுக்கு மாநகராட்சி சார்பில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
    திருச்சி:

    திருச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தடையின்றி நடந்து வருகின்றன. வீட்டில் முடங்கி கிடக்கும் முதியவர்கள், வெளியே நடமாட இயலாத மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இல்லம் தேடிச்சென்று நடமாடும் குழுவினர் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டது.   

    இந்த நிலையில் திருச்சி மாநகராட்சி பகுதிகளில் பஸ், ரெயல் நிலையங்கள், பாலங்களின் கீழ் பகுதி மற்றும் கடை வராண்டாக்களில் படுத்து தூங்கும் வீடு இல்லாத, ஆதரவற்ற தெருவாசிகளுக்கு  தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த நவம்பர் மாதம் தொடங்கப்பட்டன.

    திருச்சியை பொறுத்தமட்டில் 1500&க்கும் மேற்பட்டோர் தெருவாசிகளாக இருப்பது கண்டறியப்பட்டது.

    இவர்களுக்கு ஆதார் அட்டை, ரேசன் கார்டுகள் எதுவும் இல்லாததால் அவர்களின் புகைப்படம் எடுக்கப்பட்டு தற்காலிக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. பின்னர்கவுன்சிலிங் கொடுத்து இதுவரை 420 பேருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த தடுப்பூசி குழுவில் இடம்பெற்றிருந்த சுகாதாரத்துறை பணியாளர் ஒருவர் கூறும்போது, தெருவாசிகளுக்கு தடுப்பூசி செலுத்துவது சவாலான பணியாக இருந்தது. இவர்கள் எப்போதும் ஓரிடத்தில் நிலையாக இருப்பதில்லை.

    அவர்கள் அடிக்கடி இடம் விட்டு இடம் மாறிக்கொண்டு இருப்பார்கள். இவர்களின் நல்ல மனநிலையில் இருப்பவர்களை தேடி கண்டுபிடித்து கவுன்சிலிங் கொடுத்து தடுப்பூசி செலுத்தி அதற்கான சான்றிதழும் கொடுத்துள்ளோம்.

    மனநலம் குன்றியவர்கள், போதை வஸ்துக்களுக்கு அடிமையானவர்கள், குற்றப்பின்னணி கொண்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த முடியவில்லை.

    ஆகவே முழுமையாக தெருவாசிகளுக்கு தடுப்பூசி செலுத்த மேலும் காலதாமதம் ஆகும். அதற்கான முயற்சிகளை சுகாதாரத்துறை எடுத்துள்ளது என்றனர்.
    Next Story
    ×