என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
நெல்லையில் மின்வேலியில் சிக்கி விவசாயி பலி
நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள தெற்கு பட்டியில் மின்வேலியில் சிக்கி விவசாயி பலியானார். இதுதொடர்பாக பக்கத்து வயல்காரரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள தெற்கு பட்டியை சேர்ந்தவர் வேல்சாமி (வயது48). இவரது மனைவி வெயிலாச்சி. இவர்களுக்கு சதீஷ்குமார் என்ற மகனும், விக்னேஷ்வரி என்ற மகளும் உள்ளனர்.
வேல்சாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைகளின் படிப்புக்காக பேட்டை காந்தி நகருக்கு குடும்பத்துடன் வந்தார். இவருக்கு சொந்தமான வயல் தெற்கு பட்டி வல்லவராயன் குளம் அருகே உள்ளது.
இந்நிலையில் நேற்று அதிகாலை வயலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற வேல்சாமி வீடு திரும்பவில்லை. காலையில் இருந்து அவரது செல் போனுக்கு போன் செய்தும் எவ்விதமான பதில் வரவில்லை.
வயலில் ஏதேனும் வேலை செய்து கொண்டிருப்பார் என்று குடும்பத்தினர் நினைத்தனர். இரவு வெகு நேரமாகியும் வேல்சாமி வராததால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் வயலுக்கு சென்று பார்த்தனர்.
அப்போது அங்குள்ள பக்கத்து வயல் அருகே வேல்சாமி இறந்து கிடந்தார். இதுகுறித்து மானூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வேல்சாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து வேல்சாமி எவ்வாறு இறந்தார்? என்று விசாரணை நடத்தினர். பக்கத்து வயலில் பயிரிடப்பட்ட பயிர்களை காட்டு பன்றிகள் அடிக்கடி வந்து சேதப்படுத்தி உள்ளது.
இதனால் அதன் உரிமை யாளரான தெற்குபட்டியை சேர்ந்த ராமகிருஷ்ணன் காட்டு பன்றிகளின் அட்டகாசத்தை பொறுக்க முடியாமல் கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்வேலி அமைத்துள்ளார்.
வேல்சாமி வயலுக்கு வந்து வெகு நாட்கள் ஆகி விட்டதால் அவருக்கு மின்வேலி அமைத்திருப்பது தெரியவில்லை. இதனை அறியாமல் நேற்று வயலுக்கு சென்ற வேல்சாமி மின்வேலியில் சிக்கி இறந்திருக்கிறார் என்பது தெரியவந்தது.
இதையடுத்து பக்கத்து வயலின் உரிமை யாளரான ராமகிருஷ்ணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story