
ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லூரி எம்.ஏ. தமிழ் படித்து வரும் மாணவி சிவரஞ்சனி. இவர் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுருவின் வழிகாட்டுதலில் தொல்லியல் இடங்களை ஆய்வு செய்து ஆய்வு கட்டுரைகளை எழுதி வருகிறார்.
இவர் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள மேலச்செல்வனூர் கிராமத்தில் திருப்புல்லாணி தொன்மை பாதுகாப்பு மன்ற மாணவர்கள் கோகிலா, மனோஜ், டோனிகா, பிரவீனா ஆகியோருடன் ஆய்வு செய்தபோது சங்ககால-இடைக்கால மக்கள் குடியிருப்புகள், சோழர்கால சிவன் கோவில், தமிழ்நாட்டில் மிகப் பெரிய பறவைகள் சரணாலயம், கூத்தன் கால் என பல வரலாற்று சிறப்புகள் இந்த ஊருக்கு உள்ளவை என்று கண்டறிந்துள்ளனர்.
இதுபற்றி மாணவி சிவரஞ்சனி கூறியதாவது:-
மேலச்செல்வனூர் கிராமத்தில் கடற்கரை பாறைகளால் சோழர் காலத்தில் கிபி 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழைய சிவன் கோவில் இருந்தது. அது சேதமடைந்து மண் மூடியதால் அதை அகற்றி விட்டு புதிதாக கட்டியுள்ளனர். அதில் நந்தி மட்டுமே பழையது.
பழைய கோவிலில் இருந்த 4 கல்வெட்டுகளை மத்திய தொல்லியல் துறை 1928-ல் பதிவு செய்துள்ளது. இந்த கல்வெட்டுகளில் இவ்வூர் செழுவனூரான சத்துருப்பங்கரநல்லூர் எனவும், இறைவன் திருப்புலீஸ்வரமுடைய நாயனார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாண்டிய மன்னரின் 6-ம் ஆட்சியாண்டு கல்வெட்டு ஏழூர் செம்பிநாட்டு ஆப்பனூர் (கடலாடி அருகே உள்ளது) கிராம மக்கள் அரசுக்கு செலுத்திய வரியை இந்த கோவிலுக்கு மேலக்கிடாரம் திருவனந்தீஸ்வரமுடையார் கோவிலுக்கும் மன்னர் வழங்கியுள்ளதாக தெரிவிக்கிறது. இது கோனேரின்மை கொண்டான் எனும் அரசாணை கல்வெட்டு என்பதால் இதில் மன்னர் பெயர் இல்லை.
கோவில்களை பாதுகாக்கவும், தொடர்ந்து வழிபாடுகள் நடைபெறவும் பாண்டிய மன்னர்கள் கொண்ட அக்கறையை இது காட்டுவதாக உள்ளது.
மேலும் திருஆப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் கோவிலுக்கு 40 ஆல் செம்பாடி அச்சுக்கு (காசு) நிலம் பெற்றதையும், சிலையன் என்பவரும் மேலக்கிடாரத்தைச் சேர்ந்தவர்களும் இந்த கோவிலில் விளக்கு ஏற்ற பணமும், கொடையும் வழங்கியுள்ளதையும் கோவில் சிவ பிராமணருக்கும், தேவகன்னிக்கும் தானம் வழங்கியதையும் இங்குள்ள பிற கல்வெட்டுகளால் அறிய முடிகிறது.
கோவிலின் வடக்கிலும் கண்மாய் கரையிலும் உள்ளேயும் சங்க காலத்தைச் சேர்ந்த கருப்பு, சிவப்புநிற பானை ஓடுகள் சிதறிக் கிடக்கின்றன. அதுபோல் நத்தமேடு பகுதியில் இடைக்காலத்தைச் சேர்ந்த பானை ஓடுகள் இரும்பு தாதுக்கள், வட்டச்சில்லு உடைந்த மான் கொம்புகள் உள்ளன. இதன் மூலம் 2 ஆயிரம் ஆண்டுகளாக, அதாவது சங்ககாலம் முதல் இங்கு மக்கள் குடியிருப்பு இருந்துள்ளதை அறிய முடிகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பெரிய கண்மாய்கள் அவை வெட்டப்பட்ட போதே நீர்வரத்துக்காக வைகை ஆற்றில் இருந்து கால்வாய்கள் வெட்டப்பட்டுள்ளன. அதேபோல் மேலச்செல்வனூர் கண்மாய் நீர்வரத்துக்காக கூத்தன் கால்வாய் வெட்டப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தம் 15 பறவைகள் சரணாலயங்களில் 5 ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளன. இதில் 593.08 ஹெக்டேர் பரப்பளவில் மாநிலத்திலேயே கண்மாய் பகுதியில் அமைந்த மிகப் பெரிய பறவைகள் சரணாலயம் மேலச்செல்வனூர் தான். இந்த கோவில் கேணியினுள் எலுமிச்சம்பழம் இட்டால் அது மாரியூர் சிவன் கோவில் கேணியினுள் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.