search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தில் இரண்டடுக்கு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது
    X
    ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தில் இரண்டடுக்கு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது

    உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கொரோனா கட்டுப்பாடுகளுடன் நாளை நடக்கிறது

    காளைகள் திறந்து விடப்படும் வாடிவாசல், பார்வையாளர்கள் மாடம், நிகழ்ச்சி நடக்கும் மேடை உள்ளிட்ட அனைத்தும் தயார் நிலையில் இருக்கின்றன. மாடுபிடி வீரர்களும் நாளை நடக்கும் போட்டியில் காளைகளை எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர்.

    அலங்காநல்லூர்:

    தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரை மாவட்டத்தில் மிகவும் பிரசித்திபெற்றது. பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றது.

    ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கல் அன்று அவனியாபுரத்திலும், மாட்டுப்பொங்கலன்று பாலமேட்டிலும், காணும் பொங்கல் அன்று அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும். இந்த போட்டிகளில் ஆயிரக்கணக்கான வீரர்கள், பார்வையாளர்கள் பங்கேற்பார்கள்.

    மதுரை மாவட்டம் மட்டுமின்றி சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வீரர்கள் மட்டுமின்றி காளைகளும் பங்கேற்கும். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ஏராளமான பரிசுகள் கிடைக்கும் என்பதால் மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு காளையை அடக்குவார்கள். இதனால் ஜல்லிக்கட்டு போட்டி களைகட்டும்.

    ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு அதன் உரிமையாளர்கள் பல மாதங்களாக சிறப்பு பயிற்சி அளித்து தயார் செய்வார்கள். ஒவ்வொரு ஆண்டை போன்றும் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு வீரர்களும், காளையின் உரிமை யாளர் களும் தயாராகி வந்தனர்.

    இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததால் ஜல்லிக்கட்டு போட்டிக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான வீரர்கள் பங்கேற்கும் போட்டியில் 300 வீரர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும், 150 பார்வையாளர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும், 700 காளைகள் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள முடியும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

    அரசு விதித்த கட்டுப்பாடுகளின்படி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்படி பொங்கல் பண்டிகை அன்று அவனியாபுரத்திலும், நேற்று (15-ந்தேதி) பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்ட போட்டியில் பங்கேற்ற வீரர்கள் போட்டி போட்டு காளைகளை அடக்கினர்.

    பாலமேடு ஜல்லிக்கட்டில் அரசு வழிகாட்டுதல்படி ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்ட 701 காளைகள் வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்டன. 420 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று காளைகளை அடக்கினர். 150 பார்வையாளர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டை காண அனுமதிக்கப்பட்டனர்.

    சீறிவந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கி பல்வேறு பரிசுகளை தட்டி சென்றனர். பல காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் பரிசுகளை பெற்றது. 21 காளைகளை அடக்கிய பொதும்பு ஊராட்சியை சேர்ந்த பிரபாகரன் முதல் பரிசை பெற்றார். சிறந்த காளையாக சிவகங்கை மாவட்டம் புலியூரைச் சேர்ந்த சூறாவளி என்பவரின் காளை தேர்வு செய்யப்பட்டது. காளையின் உரிமையாளருக்கு தமிழக முதல்வர் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது.

    இந்நிலையில் அனைவரும் மிகவும் விரும்பி பார்க்கக்கூடிய உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நாளை (17-ந்தேதி) நடைபெறுகிறது. வழக்கமாக காணும் பொங்கல் தினத்திலேயே அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த வாரம் முதல் ஞாயிற்றுக்கிழமைதோறும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

    இதனால் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று நடத்தப்படுவதற்கு பதிலாக நாளை நடத்தப்படுகிறது. அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளில் பின்பற்றப்பட்ட நடைமுறைகளே இந்த போட்டியிலும் கடை பிடிக்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான அனைத்து பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    காளைகள் திறந்து விடப்படும் வாடிவாசல், பார்வையாளர்கள் மாடம், நிகழ்ச்சி நடக்கும் மேடை உள்ளிட்ட அனைத்தும் தயார் நிலையில் இருக்கின்றன. மாடுபிடி வீரர்களும் நாளை நடக்கும் போட்டியில் காளைகளை எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர்.

    இந்த முறை ஒரு இடத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற வீரர்கள் வேறு இடத்தில் நடக்கும் போட்டியில் பங்கேற்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவனியாபுரம் மற்றும் பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்காத வீரர்களே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்கிறார்கள்.

    ஒவ்வொரு ஆண்டும் இந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பார்கள். பல மாவட்டங்களைச் சேர்ந்த பார்வையாளர்கள் ஜல்லிக்கட்டை காண வருவார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக வெளியூர் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.

    உள்ளூர் பார்வையாளர்களும் 150 பேர் மட்டுமே பங்கேற்க முடியும். இதனால் மற்ற ஆண்டை போன்று பார்வையாளர்கள் அதிகம் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இருந்த போதிலும் முழு வேகத்துடன் போட்டியில் பங்கேற்க வீரர்கள் தயாராக உள்ளனர்.

    Next Story
    ×