search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம்
    X
    எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம்

    மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைய சூளுரைப்போம்: ஓ.பன்னீர் செல்வம்-எடப்பாடி பழனிசாமி அறிக்கை

    எம்.ஜி.ஆர். பிறந்த நாளில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைய சூளுரைப்போம் என்று ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும், புரட்சித் தலைவரின் ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புகளுக்கும், எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்த நாளையொட்டி நல்வாழ்த்துக்களைக் கூறி மகிழ்கிறோம்.

    ஒரு தனி மனிதராக, பணியாற்றிய கலைத் துறையின் நாயகராக, ஓர் இயக்கத்தின் தலைவராக, மக்களின் பேராதரவைப் பெற்ற முதல்வராக, செல்லும் இடமெல்லாம் சீர்பெருக்கி, பேர் நிறுத்தி கல்லும் கனியாகும் கருணையால் எல்லோருக்கும் பிள்ளையென நாளும் பேசவந்த கண்மணியே வள்ளலே எங்கள் வாழ்வே என்று ஆயிரம் தலைமுறை தமிழர்கள் கொண்டாடி மகிழத்தக்க மன்னாதி மன்னன், ஒளி விளக்கு, எங்கள் வீட்டுப் பிள்ளை அல்லவா நம் அன்புத் தலைவர் எம்.ஜி.ஆர்.

    தனக்கென அவர் ஒருபோதும் வாழ்ந்ததில்லை. தன் திறமையாலும், உழைப்பாலும் பாடுபட்டு ஈட்டிய பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பெரும் செல்வத்தை ஏழைகளுக்கும், எளியவர்களுக்கும், உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கும், உயில் எழுதிவைத்துவிட்டு மறைந்த புரட்சித் தலைவருக்கு நிகரான கொடை வள்ளல் யாரும் உண்டோ? புரட்சித் தலைவர் மழை போலும், மலர் போலும் பிறர்க்கென வாழ்ந்தவர்.

    10ஆண்டுகள் ஆட்சி செய்தாலும், பலநூறு ஆண்டுகள் நிலைத்து நிற்கும் எடுத்துக்காட்டான திட்டங்களை நிறைவேற்றி, கருணை தீபமாய் ஒளிரும் ஆட்சி முறையை தமிழ்நாட்டுக்கு வழங்கியவர் நம் வள்ளல் எம்.ஜி.ஆர். உலகம் போற்றும் சத்துணவுத்திட்டம், தந்தை பெரியாரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் கிராமப் புறங்களில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்கூட நிலவி வந்த அடக்குமுறை பிரபுத்துவ நிர்வாக அமைப்பை ஒழித்தது; பெண்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் தனி ஒதுக்கீடு என்று எல்லா வகையிலும் போற்றத்தக்கவையும், எந்நாளும் நிலைத்திருக்கக் கூடியவையுமான பல சீர்திருத்தங்களைச் செயல்படுத்தியவர் எம்.ஜி.ஆர்.

    புரட்சித் தலைவரின் தலைமைச் சீடராக, அவரையே தனது மாதா, பிதா, குரு தெய்வமாகக் கொண்டு வாழ்ந்த புரட்சித் தலைவி அம்மாவிடம் 30 ஆண்டுகள் பயிற்சி பெற்ற நாம், புரட்சித்தலைவர் வகுத்துத் தந்த பாதையில், புரட்சித் தலைவியின் வீரத்தோடும், விவேகத்தோடும் செயல்பட வேண்டிய காலம் இது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    மனசாட்சியை அடகு வைத்துவிட்டு, மனம் போனபடி பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி, கார்ப்பரேட் விளம்பர தேர்தல் பிரச்சாரம் செய்து, உள்ளத்தில் பொய்யும், உதட்டில் புன்னகையுமாய் மக்களிடம் உறவாடி ஒருசில லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்திருக்கும் தி.மு.க. அரசின் திறமையற்ற, ஊழல் மிகுந்த, மக்களை வஞ்சிக்கின்ற, சுயநலம் மிக்க ஒரு குடும்ப ஆட்சியின் அலங்கோலங்களை தமிழ்நாட்டில் அடியோடு வேரறுக்க நாம் அனைவரும் போர்பரணி பாடவேண்டிய நேரம் இது. புரட்சித்தலைவர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் நடத்தியது போன்ற பொற்கால ஆட்சியை விரைவில் நிலைநாட்டிட நாம் சூளுரைக்க வேண்டிய நாள்தான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் என்பதே கழக உடன் பிறப்புகளோடு இந்நாளில் நாங்கள் கூறும் செய்தியும், வேண்டுகோளும்.

    தமிழகம் காக்க தன்னலஆட்சியை அகற்றுவோம்.

    கோட்டையிலே கோட்டையிலே நமதுகொடி பறந்திடவேண்டும்.

    கொள்கைவீரதீபங்களை ஏற்றிடுவோம்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    Next Story
    ×